

குட்டிக் கதை 1: முதலில் எது?
பல போர்க்களங்களில் வென்றவன் பராசரன் என்ற மன்னன்.
அவன் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று கொடுத்ததெல்லாம் பலன் கொடுத்தது. அவன் வெற்றி பெறாத துறையேயில்லை. அவனை வணங்காத தலையில்லை.
ஆனால், அவன் மனமும் பலமுறை சஞ்சலத்துக்கு ஆட்பட்டது. 'எனக்கு மனக்குறை இருக்கிறதே' என்றவன் நொந்து கொண்டான். அமைதி இல்லாமல் அங்குமிங்கும் அலைந்தான். ஊரை வென்றேன்; உலகை வென்றேன் மன்னர் பலரை அடிப்பணியச் செய்தேன். நினைத்ததை எல்லாம் நடக்க வைத்தேன். இனந்தெரியாத கவலை என்னையும் ஆட்கொண்டு விட்டதே! ஏன்? ஏன்? என்று கதறினான்.
தூரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.
"எல்லாவற்றையும் நீ வென்றாய் ஆனால் முதலில் வெல்ல வேண்டிய ஒன்றை நீ வெல்லவில்லை."
"நானா? நான் வெல்லவில்லையா? என்னால் வெற்றி கொள்ளப்படாதது என்ன இருக்கிறது?"
அந்த குரல் அமைதியாக பதிலளித்தது.
"நீ உன்னை வெல்லவில்லை; தன்னை வெல்லாதவன் உலகை வென்றாலும் அமைதி தழைப்பதில்லை என்னை வெல்வது எப்படி?"
"சபாஷ்! உலகை வெல்ல உனக்கே புத்தி இருந்தது உன்னை நீயே வெல்ல பிறர் புத்தி தேவைப்படுகிறது கேள்! வெற்றியால் பெற்ற அகங்காரங்களை களைந்து விட்டு நீ நீயாக மாறிவிடு. அப்படி மாறிவிட்டாயானால் நீ உன்னை வென்று விட்டதாக பொருள்!."
பராசரன் வெகுவாக முயன்று பார்த்தான். அகங்காரங்களை துறந்து விட்டு தன்னை வெல்வதற்கு அவன் பெரு முயற்சி எடுத்துக் கொண்டான். அந்த முயற்சியில அவன் வெல்லவில்லை சாவு அவனை வென்று விட்டது.
குட்டிக் கதை 2: தீர்ப்பு!
ஒரு அறிவாளியும் முட்டாளும் ஓவியச்சாலை ஒன்றில் சந்தித்தார்கள். இருவரும் ஆளுக்கு ஒரு படம் போடுவது என்றும் ஒரு மாஜிஸ்திரேட்டை கூப்பிட்டு எது நல்ல ஓவியம் என்று கேட்பதென்றும் முடிவு செய்தார்கள். அறிவாளி ஒரு அழகான பெண்ணின் படத்தை வரைந்தான். உடனே முட்டாள் எழுந்து அந்த படத்திற்கு மீசை போட்டான்.
மாஜிஸ்திரேட்டை கூப்பிட்டு காட்டினார்கள்.
மாஜிஸ்திரேட்டு வியப்போடு சொன்னார், "மீசை எவ்வளவு அழகாக இருக்கிறது."
குட்டிக் கதை 3: ட்ரா
பாரத போர் தொடங்கப்போகிறது. பரந்தாமன் போருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். பாஞ்சாலி கேட்டாள், "பரந்தாமா இந்த போரில் நாம் வெற்றி பெறுவோமா?"
பரந்தாமன் சொன்னன். "வெற்றி பெறுவோமோ, இல்லையோ தோல்வியடைய மாட்டோம்."
பாஞ்சாலி கேட்டாள், "நீ சொல்வது எனக்கு புரியவில்லையே..! வெற்றியும் பெறாமல் தோல்வியும் அடையாமலா ஒரு யுத்தம் முடியும்."
பரந்தாமன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய்விட்டான்.
அந்த சிரிப்பின் அர்த்தம் பாஞ்சாலிக்கு புரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தபின் அதன் பொருள் நமக்கு விளங்குகிறது.
வெற்றியும் பெறாமல் தோல்வியும் அடையாமல் விவாதங்கள் முடிவடையும் இடத்துக்கே நாம் சட்டசபை என்று பெயர் வைத்திருக்கிறோம்.
குட்டிக் கதை 4: நாக்கின் கதை!
எமதர்மன் சித்திரகுப்தனிடம் இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு என்று சொன்னான்.
அதுபோல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.
அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக் கொண்டு கிடந்தன.
சில நாக்குகள் மரத்துப்போய் இரு கூறாக பிளந்து கிடந்தன.
"மரத்துப்போய் இரட்டையாக கிடக்கும் நாக்குகள் எல்லாம் யாருடையவை" என்று கேட்டான் எமதர்மன். "இரட்டையாக கிடைக்கும் நாக்குகள் எல்லாம் ஆளுங்கட்சிக்காரர்களின் நாக்குகள் பிரபு; துடித்துக் கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்கட்சிக்காரர்களின் நாக்குகள் பிரபு" என்றான் சித்தரகுப்தன் .
"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்" என்று கேட்டான் எமன்.
"அவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுடைய நாக்குகள்" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன்
குட்டிக் கதை 5: துன்ப சினேகிதன்!
ஒரு சோலைக்கு இலையுதிர் காலத்தில் மட்டுமே ஒரு குயில் வந்து கொண்டிருந்தது.
"இந்த காலத்தில் ஏன் வருகிறாய் குயிலே" என்று ஒரு மரம் கேட்டது.
நான் வசந்த காலத்தை நண்பர்களுக்காக ஒதுக்கி விடுகிறேன்.
என் பகைவர்களின் கோபம் தணிந்ததற்காக கோடை காலத்தை அவர்களுக்கு கொடுத்து விடுகிறேன்.
எவரும் தேடாத இலையுதிர் காலத்தை நான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். இதன் மூலம், மரங்களே.. உங்கள் துன்பத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். தொல்லை இல்லாத தனிமையையும் நான் அனுபவிக்கிறேன்."
"இருக்கும்போது எல்லோரும் வருவார்கள். இல்லாத போது யார் வருவார்கள்" ஒரு மரம் சொன்னது.
"கனி கொய்யும் காலத்தில் ஒரு நாள் நீ வரவேண்டும் உனக்காக நாங்கள் பசுமையோடு காத்திருப்போம்".
அதன் வேண்டுகோளுக்கு இணங்க கனி கொய்யும் காலத்தில் குயில் வந்தது.
சோலை முழுவதையும் பறவைகள் சூழ்ந்து கொண்டிருந்தன.
குயிலைப் பார்த்ததும், "யாரோ புதியவன் வருகிறான்" என்று ஒரு பறவை சத்தம் போட்டது.
எல்லா பறவைகளும் குயிலை தாக்கத் தொடங்கின. தங்கள் நண்பனுக்கு ஏதும் செய்ய முடியாமல் மரங்கள் கண்ணீர் வடித்தன.
குயில் வானத்தில் பறந்தது பறந்தபடியே சொன்னது, "பார்த்தீர்களா வாழும் காலத்தில் கூட நாம் துன்பத்திலே தான் கலந்து கொள்கிறோம். வழக்கம்போல நான் இலையுதிர் காலத்திலேயே வருகிறேன்."
குட்டிக் கதை 6: ஏழ் பிறவி!
உடைந்து போன ஒரு மண்பானையின் கழுத்து பூமியில் கிடந்தது.
வழிப்போக்கன் ஒருவன் அதை கவனிக்காமல் மிதிக்கப் போனான்.
"மிதிக்காதே.. நான் ஒரு பானையின் கழுத்து!" என்று சத்தம் போட்டது.
வழிப்போக்கன் சிரித்தான்.
"இனி உனக்கு என்ன வாழ்வு? உன்னை மிதித்தால் என்ன? உடைத்தால் என்ன? நீ இப்பொழுது பானை அல்ல உடைந்து போன அதன் கழுத்து!."
கழுத்து இதனை கேட்டு சிரித்தது.
"முன்பு நான் பானை! இப்போது கழுத்து! நாளை மீண்டும் களிமண்! பிறகு ஒரு புதிய பானை நீ?."
வழிப்போக்கன் யோசித்தான். அதை தொட்டு கும்பிட்டு விட்டு தன் வழியே போனான்.