

‘தொட்டில் தொடங்கிச் சுடுகாடு வரை’ மனித வாழ்வோடு கூடவே வருவது மரம் என்பார்கள். உண்மைதான்! தொட்டிலுக்கும் மரந்தான்! இறுதியில், சிதைக்கும் மரந்தான்! (நகர்ப் புறங்களில் தற்போது எலக்ட்ரிக் கிரிமடோரியம் வந்து விட்டாலும், சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு மேல் உள்ள இந்திய நாட்டில் மரத்தோடுதான் மனித வாழ்வின் இறுதி - அது பெட்டியாய் இருந்தாலும் சரி! அனலாய் இருந்தாலும் சரி! மரத்தைப் போலவே மனித வாழ்வுடன் இயைந்தது இசையும், பாடலும்!
கருவில் ஆரம்பித்துக் கடைசியில் பிடி சாம்பலாகி நீரில் கரையும்வரை, மனித வாழ்வின் அத்தனை தருணங்களையும் அழகாய்ப் படம் பிடித்துக் காட்டிய அற்புதக் கவிஞர் கண்ணதாசன்!
காதல், வீரம், கல்வி, செல்வம், பாசம், வேஷம், தத்துவம், ஆன்மிகம், மதங்கள், சாமுத்ரிகா லட்சணம் என்று அவர் தொடாத துறையே இல்லை. அத்தனையிலும் டாக்டரேட் வாங்கும் அளவுக்கு உயர்ந்த,
தன்னிகரற்ற கவிஞர் அவர்;
மதங்களைக் கடந்த மாமனிதர் அவர்;
திறந்த புத்தகமாய்த் தன் வாழ்வை வைத்திருந்தவர்;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்;
உரசியே பார்த்தாலும் ஒளி விட்டவர்;
நூறாண்டுகளுக்கு மட்டுமல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் ஆட்சி செய்பவர்;
தமிழும், தமிழனும் உள்ளவரை அவர் கவிதைகளுக்கும் ஏன்? அவர் நினைவுகளுக்கும் மரணமில்லை;
மரணமில்லாப் பெரு வாழ்வில் வதிந்தவர்!
தொட்டிலில் தொடங்கும் அந்தத் தாலாட்டுப் பாடல் ஒரு நேரத்தில் ஒலிக்காத நாளே இல்லை என்று சொல்லுமளவுக்குப் பிரபலமாகி இருந்தது.
‘நதியில் விளையாடிக்
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே!’
ஓடியாடி விளையாடும் உற்சாக வயதில், எல்லாக் குழந்தைகளும் இன்பத்தை அனுபவித்து விடுவதில்லை. நாணயத்தின் இரு பக்கத்தைப்போல, பூவாய் மலர்ந்து பொலிவு பெறுபவர்களும் உண்டு; தலையெடுக்க முடியாமல் சங்கடப்படுபவர்களும் உண்டு. இரண்டையும் காயினைப் போல, ஒரே பாட்டில் உரக்கச் சொல்லிய யுக்தி, கவிஞரைத் தவிர வேறு யாருக்கு வரும்?
‘செல்வர்கள் இல்லத்தில்
சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ணக் கிண்ணத்தில்
பால் கஞ்சி’
‘கண்ணீர் உப்பிட்டுக்
காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி!’
பருவ வயது வந்ததும் எதிரான பாலினத்தின் மீது ஓர் ஈர்ப்பு வந்து விடுகிறது.
‘கண்ணும் கண்ணும்
பேசியதும் உன்னாலன்றோ
இன்பக் காதலிசை
பாடியதும் நீயேயன்றோ!
பெண் மனத்தில்
ஏற்றிவைத்த தீபமல்லவா?'
நிறைவேறாத காதல்களல்லவா நெஞ்சை உருக்கி,நீளுலகில் காவியங்களாகப் பரிணமிக்கின்றன!
‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!’
கடவுளைக் குற்றவாளியாக்கிய கவிஞர் அவருக்குச் சாபமிடவும் தவறவில்லை!
‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!’
இந்த ஜோடியோ தடைகளைத் தகர்ந்தெறிந்து விட்டுக் குடும்பத்தாரிடம் க்ரீன் சிக்னல் வாங்கி விட்டது. அப்புறமென்ன?
‘இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமணமாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை!’
இருவரும் மனமொத்த காதலர்கள்தான்! ஆனாலும் இணைந்திருக்க முடியாத சூழல்!
‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று!’
‘காட்சியின் தண்டனை காதல்வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்னவழி?!
விரும்பிக் காதலித்தவளே வினையாக மாறினால், நிம்மதிதேடிப் புலம்பித்தவித்து ஆற்றாது அரற்றித்தானே ஆக வேண்டும்?
‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
எங்கே மனிதர் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’
‘கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே!’
காதல் கை கூடிக் குடும்பம் ஆகி விட்டால், அதில் அமைதி காண வேண்டும்.
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்புமணி வழங்கும் சுரங்கம்
வாழ்க! வாழ்க!’
குடும்பமாகிப் பிள்ளை குட்டிகளுடன், அண்ணன் தம்பியுடன் வாழ்கையில் எத்தனையோ போராட்டங்கள்! ஒன்றல்ல…இரண்டல்ல…
பாசமுள்ள அண்ணன்!
பகட்டை விரும்பும் தம்பி!
‘ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே!
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே!
அது நாடகமா? இது நாடகமா?’ (அம்மம்மா தம்பி என்று)
அப்பாவோ, காவல் துறையின் உயரதிகாரி.
அன்பு மகனோ… வேறு விதமாக.
‘சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது - அதில்
பந்தம் ஒரு கால்விலங்கு நான் போட்டது.. (சோதனை மேல் சோதனை)
அண்ணன்-தங்கை உறவுகள் அனைத்தும் பாசமலராக மலர்வதில்லை. கருத்து வேறுபாடுகள் இடையிடையே தலை தூக்குவதுமுண்டு. அவள் ஒரு தொடர்கதையாக இருந்தாலுங்கூட.
‘தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்-அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்…
எல்லாமும் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. நாமொன்று நினைக்கத் தெய்வம் வேறொன்றை நடத்திக் காட்டி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; பலசமயம் வேதனையிலும் மூழ்கடிக்கும்.
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை!’
வாழ்க்கை என்பது சிலருக்கு வானவில். அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்து, ஆனந்தத்தில் மூழ்கடிக்கும் வண்ண மயமானது. ஆனாலும் எவ்வளவு நேரம்? மிகக் குறைந்த நேரம் மட்டுமே! கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். வாழ்வின் அடிமட்ட மக்களுக்கோ அது ஒரு தொடர்கதை. அதுவும் மெகா சீரியல்கள் போல். போதுமென்றாலும் அது அவர்களை விடுவதில்லை. சோகத்திலும், துயரத்திலும் அவர்களை ஆழ்த்தி அலைக் கழிக்கும்!
மகளை, மகனை இழந்தவர்கள் படும்பாடு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் விளக்குவது கடினம்.
‘பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார்மகளே பார்!’
வாழ்வின் இறுதிகூட நாம் நினைத்தபடி அமைவதில்லை! அதிலும் எத்தனையோ விதங்கள்!
‘மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று…
அழுது லாபமென்ன-அவன்
ஆட்சி நடக்கின்றது’
உடலில் ஓடும் ரத்தம் சுண்டச் சுண்ட உணர்வில் மாற்றங்கள் ஏற்பட்டு, ஆண்டவனின் பாதங்களை அடிமனது நினைந்து ஆறுதல் தேடும்!
‘ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு…
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி…
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி…’
கால் நீட்டிப் படுத்துக் காற்றைச் சுவாசிக்காது விட்டால்…முடிந்தது கதை!
‘வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
மிகச் சிறந்த ஜோதிடர்கள் கூட ஒவ்வொரு ராசிக்குமான பொதுப்பலனைக் கூறி விட்டுத் தனிமனிதர்களுக்கான பலனை, அவரவர் கட்டங்களைப் பார்த்தே கணிக்க முடியுமென்று கூறுவார்கள். ஆனால் கவிஞரோ, ஒவ்வொருவரின் உள்ளக் கிடக்கையையும் அறிந்து அவற்றுக்கு மருந்தாகும் பாடல்களைக் கொடுத்துச் சென்றுள்ளார்.
அதனால்தான் இவர், மனிதர்களோடு இணைந்த மகத்துவக் கவிஞர்!
கடல் நீரில் குளிப்பாரும் உண்டு… அதனைத் தீர்த்தமாகத் தலையில் தெளிப்பாரும் உண்டு. கடல், பரந்து விரிந்தது. அதைப் போல்தான் கவிஞரின் பாடல்களும்! அது ஒரு சமுத்திரம். அதிலிருந்து சில துளிகளை எடுத்து தீர்த்தமாகத் தலையில் தெளிப்பதைப் போல்தான் இங்கு நாமும் செய்திருக்கிறோம்.
மனிதர்கள் மகிழ்ந்து வாழ, சாமுத்திரிகா லட்சண விளக்கத்தையும் தரணிக்குக் கொடுத்துள்ளார்.
அர்த்தமுள்ள இந்து மதம் என்று, இந்து மதத்தை அலசி ஆராய்ந்தவர், இயேசு காவியத்தையும் படைத்து ‘எம்மதமும் சம்மதமே’ என்ற தன் நிலைப்பாட்டினை உலகிக்கு உணர்த்தினார்!
பல நூறு ஆண்டுகளுக்குப் பரவி நிற்கட்டும் அவர் பாடல்களும் புகழும்!