

பொன்னியின் செல்வன் தொடர் 16.05.1954-ல் முடிவுற்றது. மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதைப் பார்த்த திரைத் துறையினர், அதனை சினிமாவாக எடுக்க மிகவும் ஆசைப்பட்டனர். எம்.ஜி.ஆர். அந்தக் கதையை விலை கொடுத்து வாங்கினார்.
1958-ல் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். 22.08.1958 'நாடோடி மன்னன்' வெற்றி அவருக்கு இந்த உத்வேகத்தை அளித்திருக்க வேண்டும். ரூ. 10,000 கொடுத்து ரைட்ஸ் வாங்கி விட்டார், 1958-ல்.
நடிகர்கள் தேர்வு நடந்தது: வந்தியத் தேவன் – எம்.ஜி.ஆர்.
ஆதித்த கரிகாலன் – சிவாஜி கணேசன் அல்லது எஸ்.எஸ். இராஜேந்திரன்
அருள்மொழி வர்மர் - ஜெமினி கணேசன்
நடிகைகள் – வைஜயந்தி மாலா, பத்மினி, சரோஜா தேவி
இந்த விவரங்களை குப்புசாமி நெட்டில் படித்து விட்டு, தன் மனைவி கமலாவிடம் சொன்னார்..
கமலா: “வைஜெயந்தி மாலா தான் 'பார்த்திபன் கனவு' ஹீரோயின்.. அவரால் தான் அந்த படமே ஓடியது என்பார்கள்.. சரோஜா தேவி குந்தவையாக போடலாம்.. பத்மினி பூங்குழலியாக இருப்பார்.. வைஜெயந்தி மாலா நிச்சயம் நந்தினியாக வந்திருப்பார். அப்புறம் ஏங்க அந்த படம் எடுக்கலே?”
குப்புசாமி: “எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்தில் கால் எலும்பு முறிவு.. ஆறு மாதம் ஓய்வு எடுக்க வேண்டி வந்தது. கதை வசனம் கூட 'அண்ணா' என ஒரு ஐடியா வச்சிருந்தார்.. கல்கி அவர்கள் 5.12.1954-ல் காலமாகி விட்டதால் அவர் எழுத வாய்ப்பு இல்லை. ஒண்ணு தெரியுமா கமலா.. ஒரு நாவலைப் படம் எடுத்தால் வரிக்கு வரி எடுப்பது சிரமம்.. அதை திரைக்கதையாக மாற்றி எடுக்கணும். பாடல்கள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை இடையிடையே பொருத்தமான இடத்தில் செருகணும்.. அந்த வித்தை நன்கு அறிந்தவர் எம்.ஜி.ஆர்.. அப்படி கலந்து ஆலோசிக்க கல்கி அவர்கள் இல்லை.”
கமலா: “எம்.ஜி.ஆர் எடுத்து இருந்தால் எப்படிங்க இருந்திருக்கும்?”
குப்புசாமி: “முதல் காட்சியில் அவர் திரையில் தோன்ற ஒரு சூழ்நிலை உருவாக்குவார்.. யாரேனும் ஏழைப் பெண்ணை பழுவேட்டரையர் வீரர்கள் வீராணம் ஏரிக்கரையில் தொந்தரவு செய்வார்கள்.. அப்போது திடீரென எம்.ஜி.ஆர் ஆகிய வந்தியத் தேவன் குதிரையில் இருந்து குதித்து சண்டை செய்வார்.. முடிந்து அந்த பெண் கை எடுத்துக் கும்பிட, இவர் பயணத்தை குதிரையில் தொடருவார்.. ஒரு டி.எம்.எஸ். பாட்டு, “எங்கள் தலைவன் தஞ்சை போறார்… நஞ்சை விளையும் நன்னாடே” என்பது போல பட்டுக்கோட்டையார் எழுதி இருப்பார்.. எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் ஒரு சூப்பர் பாட்டு கிடைத்திருக்கும்...
கமலா: “நிச்சயம் சரோஜா தேவியுடன் ஒரு டூயட் கனவுக்காட்சியில் வைத்திருப்பார்… குந்தவை, வந்தியத்தேவன் ஒரு தடாகக் கரையில் பூக்களை வீசி பாடி இருப்பார்கள். ஒரு டி.எம்.எஸ். - பி. சுசீலா டூயட் நிச்சயம் வைத்து, அது ஹிட் ஆகி இருக்கும்.. அதை வாலி எழுதி இருப்பார்.”
குப்புசாமி: “தஞ்சைக்குப் போகுமுன் சம்புவரையர் மாளிகை வாசலில் கந்தமாறன் வீரர்களுடன் ஒரு சண்டைக்காட்சி வைத்திருப்பார்.”
கமலா: “நம்பியார், வீரப்பா, அசோகன் வில்லன் கோஷ்டிகளைக் காட்டுவாரே.. அவங்களுக்கு என்ன ரோல் தந்திருப்பார்?”
குப்புசாமி: “நம்பியார் அனேகமாக ரவிதாசனாக வந்திருப்பார்.. அவன் சகாக்களாக வில்லன் கண்ணன், ராமதாஸ் இருக்கலாம்.”
கமலா: “ஒரு சண்டை, ஒரு பாட்டு இப்படியாகத்தானே அவர் படம் இருக்கும்.. 'பொன்னியின் செல்வனில்' அதுக்கு எங்கே வாய்ப்பு இருக்கு?”
குப்புசாமி: “குந்தவையைப் பார்த்து விட்டு வந்தியத் தேவன் சிலோன் போவார் இல்லையா… வேதாரண்யம் கோடிக்கரையில் பூங்குழலி உதவியுடன் போவார் இல்லையா.. அதைக் கொஞ்சம் காட்டுவார்.. பூங்குழலிக்கு ஒரு தனி எஸ். ஜானகி பாட்டு வச்சிருப்பார்.”
கமலா: “இதிலேயே பாதி கதை முடிஞ்சிருக்குமே..”
குப்புசாமி: “ஆமாம், இடைவேளைக்குப் பின் சிலோன் கதை காட்டுவார்.. ஆதித்த கரிகாலன் கொலை நடக்கும்.. இவரைப் பிடிக்க வரும் வீரர்களுடன் ஒரு சண்டை நடக்கும்.. சங்கிலி பிணைத்து கைதியாக, சங்கிலிகள் ஆட சோழராஜா சபையில் கொஞ்சம் வீர வசனம் பேசுவார். அந்த வசனத்தில் அண்ணாவின் கொள்கை முழக்கம் இருக்கும். பொன்னியின் செல்வனுக்கும் திராவிட கொள்கைக்கும் என்ன சம்பந்தம் என யாருக்கும் தோன்றாது. பழுவேட்டரையராகிய அசோகன் அல்லது வீரப்பா கொலைக்கு பொறுப்பேற்க, விடுதலையாகி குந்தவை - வந்தியத் தேவன் கல்யாணம்.. எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி கல்யாணம் நடக்கும் .. சுபம்.”
கமலா: “ஏங்க, அந்த நாவலின் இதயமே தியாகசிகரம் என அருள்மொழி வர்மர் உத்தம சோழருக்கு முடி சூட்டுவது தானே.. அந்த நயம் இருக்காது போலிருக்கே?”
குப்புசாமி: “வாஸ்தவம்.. பணம் போட்டு படம் எடுப்பவர்களும், வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் இலக்கியம் வளர வேண்டும், தமிழ் முழங்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை.. பாக்ஸ் ஆபீஸ் வசூல் கொட்ட வேண்டும்.. அது தான் முக்கியம். எம்.ஜி.ஆர் பூஜை போட்ட அன்னிக்கே எல்லா ஏரியாவும் வித்துப் போய் இருக்கும்.. வெளியாகி கமர்ஷியல் ஹிட் ஆகி, இந்தப் படம் வசூலைக் கொட்டி இருக்கும். மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள்.. பாடல் வரிகளில் ஒரு தத்துவம், நயம் வைத்து இருப்பார். சோதிடர் காட்சிகளில் நாகேஷைப் போட்டு காமெடி டிராக் அமைத்து இருப்பார்; அல்லது வைத்தியர் மகன் பினாகபாணி ரோலில் நாகேஷ் வருவார்.. தரமான ஒளிப்பதிவு, கண்ணைப் பறிக்கும் கலர்.. அரண்மனை செட்கள் இதெல்லாம் அற்புதமாகப் போட்டிருப்பார். இன்றைக்கும் 'அன்பே வா' (1966-ல் ஏ.வி.எம். எடுத்த படம்) படத்தின் ஒளிப்பதிவும் காட்சி நயமும் புதுப்படங்களில் இல்லை.. என்ன நேர்த்தியான காட்சி அமைப்புகள்.. இன்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' பாட்டும் படமும் பார்க்க விறு விறுப்பாக நல்லா இருக்கே.”
கமலா: “உண்மைங்க.. ஒப்புக்கறேன்.. 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாட்டு கண்ணைப் பறிக்குதுங்க.. அந்தக் குதிரையும் சாரட் வண்டியும்.. சரி அப்போ.. எதுக்கு பொன்னியின் செல்வன்?”
குப்புசாமி: “அதில் தான் எம்.ஜி.ஆர் நுணுக்கம் அடங்கி இருக்கு.. పొன்னியின் செல்வன் என்பது ஒரு மூலக் கதை தான்.. அதில் தன் ஃபார்முலாவைத் திணிப்பதில் தான் அவர் வெற்றியே இருக்கு.”
கமலா: “ம்.. தமிழ் சினிமா தலை விதி அது தான் போலிருக்கு.”
குப்புசாமி: “ஷங்கர் எடுத்த படங்களில் 'அன்னியன்', 'முதல்வன்', 'இந்தியன்', 'சிவாஜி' இவற்றில் ஹீரோ யார் தெரியுமா?”
கமலா: “விக்ரம், அர்ஜுன், கமல், ரஜினி.”
குப்புசாமி: “இல்லே.. ரைட்டர் சுஜாதா சார் தான்.. சமூக அவலங்களையும், மனித சமுதாயத்துக்கு எதிரான லஞ்சம், அராஜகம், பணக்கார வில்லன்களின் குரூரம், அரசியல் கொட்டம் இவற்றைக் களைய, எதிர்க்க, அழிக்க ஆசைப்படும் அந்த ஹீரோ ரைட்டர் சுஜாதா தான்.. அவருடைய நிழல் பிம்பமே அந்தப் படங்களின் ஹீரோக்கள். அவர் நடிக்க முடியாது.. இயலாது.. சண்டை போட முடியாது.. அதற்கென சரியான ஹீரோ நடிகர்களைப் போட்டு எடுத்தார்கள். உள்ளான மனிதன் அந்த கதாசிரியர் சுஜாதா தான்.”
கமலா: “அப்போ பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் இல்லியா.. யார் உண்மையில் வந்தியத் தேவன்?”
குப்புசாமி: “அமரர் கல்கி அவர்களே தான். அவரே தன்னை வந்தியத் தேவனாக எண்ணி எழுதிய சுய சரிதை தான் அந்த நாவல்.. அந்த வீரமும், தடாலடி முடிவுகளும், கிண்டலான விமர்சன நையாண்டித் தனமும் சாட்சாத் கல்கி அவர்களே தான். வந்தியத் தேவன் ஒரு லெஜெண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஒரு காவியத் தலைவன்.. காதல், வீரம், நகைச்சுவை, தடாலடி முடிவுகள் நிறைந்த உற்சாகப் புருஷன் அவன்.. அவனைக் காட்சிப் படுத்துவது மிகக் கடினம்..”
கமலா: “ஒரு வேளை 'பாகுபலி' பிரபாஸைப் போட்டு ராஜமவுளி எடுத்து இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, ரிச் ஆக இருந்திருக்குமோ?”
குப்புசாமி: “யார் கண்டது… ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்கள் ஹாலிவுட்டில் பிற்காலத்தில் எடுத்தாலும் எடுக்கலாம்.. ஆச்சரியமில்லை…. பணத்தைக் கொட்டி காட்சிகள் பிரம்மாண்டத்தைக் காட்டினாலும்… வந்தியத் தேவனை யாராலும் முழுசாகக் காட்ட முடியாது.. அவன் வாழும் இடம் மக்கள் மனம்.. அவனையும் அவன் குணங்களையும் வர்ணிப்பது இயலாத காரியம். பெருமாளின் கடைசி அவதாரம் கல்கி.. ஹீரோக்களின் கடைசி அவதாரம் வந்தியத் தேவன்.”