

“அய்யய்யோ!.. கரிகாலன் முதல் மாடியிலிருந்து குதிச்சுட்டான். ஓடி வாங்க ஓடி வாங்க ”.. என்ற சத்தம் கேட்டு, ஆசிரியர் ஓய்வறையில் இருந்த எல்லாரும் ஓடி வந்தார்கள். மைதானத்தில் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மாணவர்களை வகுப்புக்குச் செல்ல கட்டளை இட்டுவிட்டு ஓடி வந்தார். இருந்தாலும் மாணவர்களும் பின்னாலேயே ஓடி வந்தார்கள். கணித ஆசிரியர் கணபதி விரைவாக முதல்வர் அறை நோக்கி ஓடினார். மூன்று தளங்களில் இருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதல்வர் விரைந்து வந்து முதலில் கூட்டத்தைக் கலையச் சொன்னார். அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை வகுப்பறைக்குள் உடனே அழைத்துச் செல்ல வேண்டும் என்று கட்டளை இட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
கரிகாலன் வலியில் கத்திக் கொண்டிருந்தான். நல்ல வேளை உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், காலை நகர்த்த முடியவில்லை. ராஜேந்திரன் அப்படியே அவனை அலேக்காகத் தூக்கி, மருத்துவ அறைக்குள் கொண்டு சென்றார். பின்னாலேயே வந்த கூட்டத்தை கலைந்து போக வைக்கும் பொறுப்பை மற்றொரு உடற்கல்வி ஆசிரியர் சாந்தியிடம் ஒப்படைத்தார்.