

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் முதல்படியாக அதிக அளவிலான ஐபிஎஸ் மட்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைநகரான சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை குறைக்கவும், போதைப்பொருள் கடத்தலை முடிவுக்கு கொண்டு வரவும் நேற்று (மே 19) இரவு காவல்துறையினர் அதிரடி கைது வேட்டையில் இறங்கினர்.
இதன்படி நேற்று ஒரே நாள் இரவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு கானா பாடகர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப் பொருள் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் இயங்கும் நேரத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ நடத்திய காவல் துறையினர், ஒரே இரவில் போதை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளனர். இதன்படி அதிகபட்சமாக புளியந்தோப்பில் 20 ரவுடிகள், தி.நகரில் 18 ரவுடிகள், அடையாறில் 16 ரவுடிகள், மயிலாப்பூரில் 12 ரவுடிகள் மற்றும் அண்ணா நாகரில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் போலீஸ் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது
ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் லோக்கல் ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களைத் தடுக்கவும், போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவும் இந்த அதிரடி கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த கைது நடவடிக்கை மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.