

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் (பெங்களூரு கஃபே) உணவருந்த சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பில் தான் இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள 'சப்கோ தி கிராஃப்டரி' (Subko The Craftery) என்ற உணவகத்திற்கு உணவருந்த சென்ற ஒரு நபர், உணவு சாப்பிட்டு முடிந்த பின்னர் தனக்கு வழங்கப்பட்ட ரசீதைப் பார்த்து அதிர்ச்சியில் உறையப் போயுள்ளார்.
அந்த பில்லில் அவருடைய பெயருக்குப் பதிலாக, அந்த உணவக ஊழியர்கள் அவரை அடையாளப்படுத்த ‘Little fat black shirt’ என்று, அதாவது 'சிறிய குண்டான கருப்புச் சட்டை அணிந்தவர்’ என்று தனது உடல் தோற்றத்தை வைத்து இழிவுபடுத்தும் வகையிலான குறிப்பு அச்சிடப்பட்டிருந்தது தான் இந்தச் சர்ச்சைக்கும் மனவேதனைக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
அந்த வாடிக்கையாளர் தனது அனுபவத்தை ரெடிட் (Reddit) தளத்தில் பகிர்ந்துகொண்டார்; ‘சப்கோ என் பெயரைப் பயன்படுத்தவில்லை. என்னை விவரிக்க என் உடல் தோற்றத்தைப் பயன்படுத்தினார்கள்’ என்ற தலைப்பில், அந்தக் கடையின் புகைப்படங்களையும் ரசீதையும், கடைக்குச் சென்ற பிறகு நடந்தவற்றை பதிவிட்டிருந்தார்.
பொதுவாக ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களை அவர்களின் பெயர் அல்லது அவர்கள் அமர்ந்திருக்கும் மேசை எண் அல்லது அவர்கள் ஆர்டர் செய்த உணவு விவரங்களை வைத்துத்தான் அடையாளப்படுத்துவது வழக்கம்.
ஆனால், ஒரு மனிதனின் உடல் அமைப்பை வைத்தும், அவரது நிறம் மற்றும் உடையை வைத்தும் இழிவுபடுத்தும் விதமாக ரசீதில் அச்சிட்டது அநாகரீகத்தின் உச்சம் என்று பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது சமூக வலைதள பதிவில் குமுறியுள்ளார்.
அந்த வாடிக்கையாளர், அவர் கடைக்குச் சென்று உணவை ஆர்டர் செய்து அதற்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகுதான், ரசீதில் உள்ள 'வாடிக்கையாளர் விவரம்' (Customer Detail) பகுதியில் அந்தக் குறிப்பைக் கவனித்துள்ளார்.
நான் 'சப்கோ தி கிராஃப்டரி'க்குச் சென்றேன், உணவை ஆர்டர் செய்தேன், கட்டணம் செலுத்தினேன், பின்னர் ரசீதைப் பார்த்தேன். வாடிக்கையாளர் விவரம் பகுதியில், என் பெயருக்குப் பதிலாக, 'சிறிய குண்டான கருப்புச் சட்டை அணிந்தவர்' (Little fat black shirt) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
என் பெயர் இல்லை. 'மேஜை எண் 12-ல் உள்ள நபர்' என்று இல்லை. ஒரு சாதாரண ஆர்டர் எண் கூட இல்லை. அந்தக் குறிப்பு வேண்டுமென்றே கணினி அமைப்பில் உள்ளிடப்பட்டது போல் தோன்றியதுதான் தன்னை மிகவும் வருத்தமடையச் செய்ததாக அவர் கூறினார்.
ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து அவரை வெறும் 'குண்டானவர்' என்று சுருக்கிவிட்டார்கள்; ஏனெனில், அடிப்படை கண்ணியம் என்பது அவர்களின் சேவையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.
இதனால் மிகவும் மனவேதனை அடைந்த அவர், இது ஒரு நகைச்சுவைக்காகச் செய்யப்பட்டது என்று எளிதாகக் கடந்து போய்விட முடியாது என்றும், ஒரு ஆணின் உருவத்தைக் கேலி (body-shaming) செய்வது மட்டும் எப்படிச் சரியாக இருக்கும் என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த வாடிக்கையாளர் கஃபே நிறுவனத்தையும் நேரடியாக விமர்சித்து இவ்வாறு எழுதினார்: "Subko, உங்கள் ஊழியர்களால் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்தாமலேயே அடையாளம் காண முடியும். இன்னும் சிறப்பாகச் செயல்படுங்கள்."
மேலும் அந்த வாடிக்கையாளர் கஃபே நிறுவனத்தையும் நேரடியாக விமர்சித்து , ‘Subko, உங்கள் ஊழியர்களால் வாடிக்கையாளர்களை அவமானப்படுத்தாமலேயே அடையாளம் காண முடியும். இன்னும் சிறப்பாகச் செயல்படுங்கள்’ என்று எழுதினார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் படு வைரலாகப் பரவிய நிலையில், அந்த உணவகத்திற்கு எதிராகப் பலரும் கண்டனக் குரல்களை எழுப்பினர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ‘சப்கோ காபி ரோஸ்டர்ஸ்’ நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகாருக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இணையத்தில் இந்தப் பதிவு அதிக கவனத்தை ஈர்த்ததால் மட்டுமே தாங்கள் பதிலளிக்கவில்லை என்று அந்நிறுவனம் கூறியது. இன்று நாங்கள் இதைப் பற்றிப் பேசுவது இது வைரலாகிவிட்டதாலோ அல்லது பிரபலமாகிவிட்டதாலோ அல்ல; இது எங்களை உண்மையாகவே பாதித்ததால்தான் நாங்கள் இதைப் பதிவிடுகிறோம்.
‘சில விஷயங்களை ரகசியமாகச் சரி செய்யலாம், ஆனால் சிலவற்றை உலகறியச் சத்தமாகச் சொல்லிச் சரி செய்ய வேண்டும். ஏனென்றால், இத்தகைய தவறுகளைக் கண்டு நாம் மௌனமாக இருப்பதுதான், அந்தத் தவறான கலாச்சாரம் தொடர்ந்து நீடிக்கக் காரணமாகிவிடும்’ என்று அந்த நிறுவனம் நேர்மையாக ஒப்புக்கொண்டுள்ளது.
உருவக் கேலி (Body Shaming) என்பது எக்காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதில் யாருக்கும் எவ்வித விதிவிலக்கும் கிடையாது, இது கொடூரமானது, இது எங்கள் நிறுவனத்தில் நடந்தது என்றும் அந்த நிறுவனம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தங்களின் உட்புறப் புகார் தீர்க்கும் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், தவறு செய்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மன்னிப்பு கோருவதற்காக அந்த வாடிக்கையாளரை நேரடியாகத் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும், இருப்பினும், சேவைத் துறையில் இருக்கும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களை எவ்வளவு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அலட்சியமாக எழுதப்பட்ட ‘ஒரு சிறு வாசகம்’ ஒருவரின் மனதை எந்தளவு ரணமாக்கும் என்பதையும், டிஜிட்டல் யுகத்தில் ‘ஒரு சிறு தவறு’ ஒரு நிறுவனத்தின்பிராண்ட் மதிப்பையே எப்படிச் சல்லி சல்லியாக நொறுக்கும் என்பதையும் இந்த பெங்களூரு சம்பவம் உலகிற்கு உரக்கச் சொல்கிறது.