குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டருக்கான கட்டுப்பாடுகள் தளர்வு..!

45 நாட்களாக இருந்த காத்திருப்பு இனி 25 நாட்கள் மட்டுமே! – மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவிப்பு!
gas cylinder
gas cylinder
Updated on

கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி, புதிய சிலிண்டர் பதிவுக்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான தீவிர போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் வர்த்தக முடக்கம் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை முற்றிலும் முடங்கியது. உலக அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் நெருக்கடியால், இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட தடையால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு வரலாறு காணாத தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே அடியாக 41 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 103 டாலரை எட்டியது. இதன் தாக்கம் இந்திய எரிசக்தித் துறையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

நிலைமையைச் சமாளிக்க, கிராமப்புறங்களில் புதிய அல்லது மறு உருளை (Refill) முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், சிலிண்டர் பெற குறைந்தபட்சம் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால் கிராமப்புற இல்லத்தரசிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

Gas cylinder
Gas cylinder

சமையல் எரிவாயு (LPG) உருளை விநியோகத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி சீரடைந்துள்ளதை தொடர்ந்து, கிராமப்புற நுகர்வோருக்கான கேஸ் புக்கிங் கால இடைவெளியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

முன்னதாக, சமையல் கேஸ் உருளை சப்ளையில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் புக்கிங் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஒரு சிலிண்டர் பதிவு செய்து அது கிடைத்த பிறகு, இந்த குறிப்பிட்ட கால அவகாசம் முடியும் வரை அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாத நிலை நடைமுறையில் இருந்தது.

தற்போது இந்தியாவில் எல்பிஜி உருளை விநியோகம் சீரடைந்துள்ளதாலும், வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர வேண்டிய சிலிண்டர் நிலுவைகள் (Pending Deliveries) பெருமளவில் குறைந்துள்ளதாலும் இந்த விதிகளில் மத்திய அரசு தளர்வு அளித்துள்ளது.

அதன்படி, இனி கிராமப்புற வாடிக்கையாளர்களும் நகர்ப்புறங்களைப் போலவே 25 நாட்கள் இடைவெளியில் புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறையை அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தத் திடீர் தளர்வு மற்றும் அறிவிப்பால், கிராமப்புறங்களில் கேஸ் உருளைக்காக நீண்ட நாட்கள் காத்திருந்த நுகர்வோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டரில் இந்த குறியீடு இருக்கா? உடனே செக் பண்ணுங்க!
gas cylinder
logo
Kalki Online
kalkionline.com