

சமீப காலங்களில் இந்தப் பால் சார்ந்த பொருளில் அதிக அளவில் கலப்படம் நடைபெறுகிறது. இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மகாராஷ்டிரா அரசு 'அனலாக் பன்னீர்' (analogue Paneer) அல்லது பால் அல்லாத பன்னீர் (non-dairy paneer) தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு முழுமையான தடை விதித்துள்ளது. 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006'-ன் கீழ், இத்தடையை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அம்மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே அறிவித்துள்ளார்.
உலகமெங்கும் உள்ள மக்களால் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக பன்னீர் (Paneer)இருக்கிறது. பாலாடைக்கட்டியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த உணவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக பன்னீர் உள்ளது. அவர்கள் சப்பாத்தி, நாண், ரொட்டி போன்ற உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாக பன்னீரை சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில்தான், மகாராஷ்டிராவில் பாலுக்கு பதிலாக தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்படும் அனலாக் பன்னீர் எனப்படும் செயற்கை பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நுகர்வோருக்கு தெரியாமல் உணவகங்கள் இதை பயன்படுத்தியுள்ளனர். அதாவது, உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்த செயற்கை பன்னீரை உண்மையான பன்னீர் எனக்கு கூறி சமையல்களில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டிருக்கிறது.
அனலாக் பன்னீரை உண்மையான பால் பன்னீர் என்று கூறி விற்பனை செய்வது நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகும் என்றும், இது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகக் கருதப்படும் என்றும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எச்சரித்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவு பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் 35 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகள் தரம் குறைந்தவை என்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்-மந்திரிதேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் துக்காராம் முண்டே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் பெரும்பாலான உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் எனக் கூறி, அனலாக் பன்னீரை வழங்குவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அனலாக் பன்னீரில், புரதச்சத்து மிகக் குறைவு; உடல்நலனுக்கும் கேடு.
எனவே, மாநிலம் முழுவதும் அடுத்த ஓராண்டுக்கு அனலாக் பன்னீரை உற்பத்தி செய்யவும், பதப்படுத்தவும், தயாரிக்கவும், வினியோகிக்கவும், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோருக்கு விளைவுகளின் தீவிரத்தை பொறுத்து தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்சம், ஆறு மாத சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் சந்தர்ப்பங்களில், ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக, இத்தகைய தடையை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.