

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன், கேஸ் சிலிண்டர் ரசீது இணைப்பது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு (Ration Card) என்பது வெறும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான அட்டை மட்டுமல்ல; இது மாநில அரசின் முக்கிய சமூக நலத் திட்டங்களைப் பெறுவதற்கான மிக முக்கியமான ஆவணமாகும்.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவசமாகவும் மலிவு விலையும் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. உணவு தானியங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
ரேஷன் கார்டுகள் அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதேபோல, ரேஷன் கார்டில் பல வகைகள் உள்ளன. குடும்ப வருமானம் போன்ற அடிப்படை அளவுகோல்களை வைத்து ரேஷன் கார்டுகள் பிரிக்கப்படுகின்றன. ரேஷன் கார்டின் வகைகளைப் பொறுத்து ரேஷன் அட்டைதார்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக, இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 38,438 ரேஷன் கடைகளும், சுமார் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர்.
அதன்படி ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்கிடையே ரேஷன் விநியோக முறையை அதிக வெளிப்படைத்தன்மையுடனும், எளிமையாகவும், பயனாளிகளுக்கு உகந்ததாகவும் மாற்ற அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும், பல முக்கிய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம் என்பதால் பலரும், குறிப்பாக புதிதாக திருமணம் ஆனவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு மாவட்ட அளவில் இ - சேவை மையங்கள் வழியாக பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்துடன் கண்டிப்பாக கேஸ் சிலிண்டர் ரசீது வைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதாக அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்..
ஏனெனில் ரேஷன் கார்டு பெற்ற பின்னர்தான், கேஸ் சிலிண்டர் இணைப்பே பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த திடீர் உத்தரவால், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் சென்றது. இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், ‘புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது, கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீது கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அதனை இணைக்க வேண்டும் என எந்த உத்தரவும் வெளியிடவில்லை. புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு, அடுத்த 60 நாட்களுக்கு பின்னரே கிடைக்கும் என்றார்.
அதே நேரம் விண்ணப்பத்துடன் குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் அட்டையை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி ஆதார் அட்டையுடன் சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது, கேஸ் சிலிண்டர் ரசீது இருந்தால் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.
உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனரின் இந்த அறிவிப்பால் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.