

உலகிலேயே மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், வறுமையில் உண்ண உணவின்றி பிறரிடம் யாசகம் கேட்டு கையேந்துவது தான். நம்மிடம் யாராவது யாசகம் கேட்டால் கையில் இருக்கும் சில்லறையை கொடுத்து விட்டு செல்வோம். யாசகம் கேட்போரைக் கூட கீழ்த்தனமாக பார்க்கும் சிலரும் இங்கு உள்ளனர்.
ஆனால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் நபர்கள் யாசகம் கேட்டு வேடம் தரித்தால் எப்படி இருக்கும். இதற்கு தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தை உதாரணமாக கூறலாம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் மும்பையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
பிச்சைக்காரன் படத்தில் அம்மாவின் உடல்நிலை சரியாக வேண்டுமெனில் மகனாகிய நீ, 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் பிச்சை எடுக்க வேண்டும் என ஒரு ஆன்மீக குரு கூறுவார். இதனை ஏற்று அவரும் பணம், பதவி மற்றும் அந்தஸ்தை எல்லாம் துறந்து விட்டு பிச்சையெடுப்பார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதியின் கதாநாயகனின் அம்மாவின் உடல்நிலை சீராகி தேறி விடுவார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது.
கிட்டத்தட்ட இந்தப் படத்தில் வருவது போன்றே ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தனது ஆன்மீக குரு கூறிய அறிவுரையின் படி சமூகத்தில் உயர் நிலையில் இருக்கும் ஒருவர் ஒருநாள் முழுவதும் பிச்சையெடுத்து இருக்கிறார்.
அவர் பணக்காரர் மட்டுமல்ல; பாஜக-வைச் சேர்ந்த அரசியல்வாதியும், எம்எல்ஏ-வும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.3,300 கோடி சொத்து மதிப்பைக் கொண்ட பராக் ஷா என்பவர், மும்பை வீதிகளில் ஒரு நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடம் அணிந்து பிச்சை எடுத்துள்ளார். பாஜக எம்எல்ஏ வாக இருக்கும் பராக் ஷா, வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து கொள்ள இப்படி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவில், “நான் எம்எல்ஏவாக இருக்கும் போது என்னை சந்திக்க காத்திருந்தவர்கள் பலரும், நான் அந்தஸ்தை இழந்த பிறகு என்னை விட உயர்வானவர்களாக கருதி எனக்கு உதவினர். நான் யாசகம் கேட்கும் போது, ஒருவர் என்னிடம் 20 ரூபாய் கொடுத்து உணவு சாப்பிடுமாறு கூறினார். சமோசா விற்கும் வியாபாரி ஒருவர், சிரித்த முகத்துடன் சாப்பிடுவதற்கு ஒரு சமோசாவை எனக்கு கொடுத்தார்.
எனது ஆன்மீக குருவின் அறிவுரையை ஏற்றதால், இன்று நான் வாழ்க்கையின் எதார்த்த நிலையை புரிந்து கொண்டேன். ஒரு நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடம் தரித்து யாசகம் கேட்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்” எனத் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் அரசியலில் மிகப்பெரிய ஆளாக இருக்கும் பலரும், இப்படி ஒரு காரியத்தை செய்வார்களா என்று கேட்டால் நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என்றே சொல்வோம். ஆனால் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ பராக் ஷா பிச்சைக்காரர் வேடம் தரித்து பிச்சை எடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிச்சை எடுத்தது மட்டுமின்றி, அதனை பொது வெளியில் தெரிவித்திருக்கும் எம்எல்ஏ-வின் செயலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.