

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக அரிசி, வெங்காயம் மற்றும் சர்க்கரையின் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், சர்க்கரை கொள்முதல் மற்றும் இருப்பு ஆகியவற்றில் புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இதன்படி வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை வியாபாரிகள் அதிகளவில் சர்க்கரையை சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை இருப்பு வரம்பு 4,000 குவிண்டாலில் இருந்து 2,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் ஒருபுறம் இருக்க, இனிப்பு வகைகளில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதற்கு Xylitol என்ற Low-calorie sweetener சேர்க்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன.
பெட்ரோலில் 20% எத்தனாலை கலப்பதற்கு கரும்பின் தேவை அதிகம் என்பதால், நாட்டில் சர்க்கரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இ-20 பெட்ரோலுக்கும், சர்க்கரை விலை உயர்விற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக இதன் விலை உயர்வது, அடித்தட்டு மக்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.
சர்க்கரை விலை உயர்வால் திருநெல்வேலியில் அல்வா-வின் விலை கூடுதலாக ரூ.20 வரை உயர்ந்துள்ளது. இதுதவிர பேக்கரி கடைகளில் இனிப்புகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரையின் அதிக தேவையை ஈடுகட்ட தற்போது செயற்கையாக இனிப்பைக் கூட்டும் Xylitol என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த செயற்கை வேதிப்பொருளை பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை சாப்பிட்டால் மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. Xylitol இரத்தத்தில் உள்ள தட்டுக்களை வழக்கத்தை விட வேகமாக உறைய வைத்து விடும். இதனை அதிகம் உட்கொள்வது ஆபத்தாக மாறலாம் எனவும், கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே இனிப்பு வகைகளை குறைவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது. இந்நிலையில் சர்க்கரைக்கு பதிலாக வேறொரு வேதிப்பொருள் சேர்க்கப்படுவது, மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடும். ஆகையால் பொதுமக்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
சூப்பர் எல்-நினோ விளைவால் நாட்டில் கரும்பு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பமான சூழ்நிலையால் கரும்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைந்திருக்கிறது.
அடுத்த 4 மாதங்களில் தமிழ்நாட்டில் பெங்கல் பண்டிகை வரவுள்ளது. அதற்குள் சர்க்கரை விலை கட்டுக்குள் வந்துவிட்டால் நிலைமை சீராகி விடும். இல்லலயெனில் மேலும் விலை உயரவே அதிக வாய்ப்புள்ளது.
ஏனென்றால் பொங்கல் பண்டிகையின் போது கரும்பு விற்பனை அதிகளவில் இருக்கும் என்பதால், சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை விலையைக் குறைக்கவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வியாபாரிகளை அதிகம் பாதிக்கிறது. இருப்பினும் புதிய விதிமுறைகள் நவம்பர் 30 வரை அமலில் இருப்பதால், சர்க்கரை விலை விரைவில் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.