

தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது. பதவியேற்பு விழாவின் போதே, அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதற்கு ஏற்ப, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசுக்கு 100 ரூபாய் வரவு எனில் 145 ரூபாய் செலவாவதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அனைத்திற்கு மேலாக, நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் என வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது வாக்குறுதியில் உரிமைத் தொகையை ரூ. 2000-ஆக உயர்த்தப்படும் என அறிவித்தது. அதேபோல் அதிமுக ரூ.2,000 என்றும், தவெக ரூ.2,500 வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தன.
இதனால் இன்றைய பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.54 லட்சம் கோடியாக உள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். மேலும் 2026-27-ம் ஆண்டில் மொத்த பட்ஜெட் - ரூ.350027 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை - ரூ.55,775 கோடியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நிதிநிலையை சீரமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்
நிதி ஆதாரம் இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் சாத்தியம் இல்லை என்று கூறிய நிதியமைச்சர், அரசு நலத்திட்ட பயனாளிகளை மறு ஆய்வு செய்து, உண்மையான நலத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உள்ளதாக கூறினார். மேலும் மான்டேக் சிங் அலுவாலியா குழுவினர் உண்மையான பயனாளிகளை நேர்மையாக ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார். இதனால் தற்போதைக்கு மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்பட மாட்டாது என்பதை நசூக்காக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்கள் கழித்தே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. அதையே தற்போதுள்ள தவெக அரசும் வருவாய் பற்றாக்குறையை காரணம் காட்டி உள்ளது.
மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகவில்லை என்றாலும், பெண்களுக்குப் பல சிறப்புத் திட்டங்கள் குறித்து இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி,
* சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிங்கபெண்கள் வலிமையப்படுத்தும் திட்டம்- பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்
* பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்
* சுய உதவி குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38,000 கோடி வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம்
* 10 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் - ரூ.59 கோடி ஒதுக்கீடு
* வெற்றி ஆடு வளர்ப்பு திட்டம் - 30 ஆயிரம் பெண்களுக்கு 5 ஆடுகள்
* வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி ஒதுக்கீடு
* மகப்பேறு நாள் நெருங்கும் போது தங்கி இருந்து பயன்பெறும் வகையில் தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி ஒதுக்கீடு
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
* நடப்பு நிதி ஆண்டில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு
* அரசு மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவிக்க தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு
* திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணனின் சீர் வரிசை திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு
- பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்து அறிவிப்பு இல்லையென்றாலும் பெண்களுக்கு பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.