

அண்மையில் ஆகஸ்ட் 26-ம்தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியான லாங்டாங் (Langtang) பிராந்தியத்தில் இமயமலைப் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இமயமலையின் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து லெந்தே ஆற்றில் (Lhende River) விழுந்ததே இதற்குக் காரணம்.
இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, உலக வரலாற்றில் 26-ஆம் தேதிகளில் நடந்த பழைய பேரழிவுகளை சுட்டிக்காட்டி இது தற்செயலா.. அல்லது இதில் ஏதேனும் மர்மம் உள்ளதா என இணையத்தில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
26-ஆம் தேதிகளில் நிகழ்ந்த முக்கிய வரலாற்றுப் பேரிடர்கள்:
நேபாளத்தில் ஆகஸ்ட் 26 ஏற்பட்ட வெள்ளம், இதே தேதியில் நிகழ்ந்த பல்வேறு பேரழிவுகளின் வரலாற்றில் சமீபத்திய சம்பவமாக இணைந்துள்ளது. அதன்படி
ஆகஸ்ட் 26, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு. 1000-க்கும் மேற்பட்டோர் பலி, சுமார் 4,500 பேர் மாயம்.
மே 26 2024 : ‘ரெமால்’ சூறாவளிப் புயல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை மிகக் கொடூரமாகத் தாக்கிய ஒரு தீவிர சூறாவளிப் புயலாகும். 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல லட்சம் வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.
செப்டம்பர் 26 2022: 'நொரு' (பிலிப்பைன்ஸில் 'கார்டிங்' - Karding) என்ற சூப்பர் சூறாவளிப் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசான் (Luzon) தீவை மிகக் கொடூரமாகத் தாக்கியது. 40 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 26 2019: பிலிப்பைன்ஸ் நாட்டை மிகக் கொடூரமாகத் தாக்கிய ஒரு சக்திவாய்ந்த வெப்பமண்டல ‘பான்போன்’ (உர்சுலா) என்ற சூறாவளிப் புயல் ஆகும். 57 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், மேலும் பலர் காணாமல் போயினர். புயல் பாதிப்பால் சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஆகஸ்ட் 26 2018: ஈரான்-ஈராக் எல்லைப் (கிர்தமான்ஷா மாகாணம், தாசெஹாபாத்) பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தார்.
அக்டோபர் 26, 2015: ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் (Hindu Kush) மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் உலுக்கியது. 210 முதல் 231 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், 400 பேர் பலியாகினர் மற்றும் 2,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நவம்பர் 26, 2008: இந்தியாவின் மும்பை மாநகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலே 26/11 மும்பை தாக்குதல் ஆகும். பாதுகாப்புப் பணியாளர்கள் 18 பேர் உட்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மே 26-ம்தேதி 2006: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம். 5,700க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
டிசம்பர் 26-ம்தேதி 2003: ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாம் (Bam) நகரில் 6.6 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் நகரின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் (சுமார் 31,000 பேர்) தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.
ஏப்ரல் 26, 1986: உக்ரைனில் (அப்போது சோவியத் யூனியனின் ஒரு பகுதி) உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட 4-வது எண் உலை வெடிப்பு, வரலாற்றின் மிக மோசமான அணு உலை விபத்தாகும். விபத்து நடந்த நாளன்று இருவர் உயிரிழந்தனர். கடுமையான கதிர்வீச்சு தாக்கம் காரணமாக அடுத்த சில வாரங்களில் மேலும் 28 பேர் உயிரிழந்தனர்.
1900 முதல் 1983 வரை உள்ள காலகட்டம்: ஜப்பான், சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்திருப்பதால், பல கொடூரமான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி பேரழிவுகளைச் சந்தித்து லட்சக்கணக்கானோர் உயிர்களை இழந்துள்ளனர்.
1930-1963 - ஜப்பான், கிரீஸ், துருக்கி, ஸ்கோப்ஜே உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கங்கள், ஆழிப்பேரலையில் (Tsunami)ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
இந்தியாவை உலுக்கிய 3 மிகப்பெரிய பேரழிவுகள் :
ஜனவரி 26, 2001: இந்தியக் குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தின் புஜ் (Bhuj) பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் (7.7 ரிக்டர் அளவு) இந்தியாவின் மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும். சுமார் 20,000 பேர் பலி, 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்.
டிசம்பர் 26, 2004: இந்தியப் பெருங்கடல் சுனாமி, மனித வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 2,30,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் / லட்சக்கணக்கானோர் மாயம்.
ஜூலை 26, 2005: மும்பை, மகாராஷ்டிராவை உலுக்கிய பெருவெள்ளம் இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும். 24 மணிநேரத்தில் 944 மில்லிமீட்டர் (37.1 அங்குலம்) மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 1,094 பேர் உயிரிழந்தனர்.
நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவுகளாகப் பார்க்கப்படும் இந்த மூன்றும் வெறும் 4½ ஆண்டுகளுக்குள்ளேயே, அதுவும் 26-ந் தேதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. இது ஒரு மர்மத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தாலும் இது அறிவியல் பூர்வமாக உண்மையல்ல; இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் நாட்காட்டியின் தேதிகளுக்கும், புவியியல் மாற்றங்களுக்கும் எந்தவித அறிவியல் தொடர்பும் இல்லை.
-‘26’-ல் இயற்கை பேரிடர்கள் மட்டுமல்ல.. 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல், 1986 செர்னோபில் அணு விபத்து, 2021 காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு உள்ளிட்ட மனிதனால் ஏற்பட்ட பேரழிவுகளும் 26-ஆம் தேதியில் நிகழ்ந்துள்ளன.
எனவே, 26-ந் தேதிக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் இடையே எவ்வித அறிவியல் தொடர்பும் இல்லை; இது முற்றிலும் ஒரு தற்செயலான ஒற்றுமையே என்றனர்.