
போதைப்பொருள் பயன்பாடு தனி நபர்களை மட்டுமல்ல, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டத்தையும் சேர்த்து பாதிக்கும். போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடல் ஆரோக்கியக் குறைவு: நீண்ட கால போதைப் பொருள் பயன்பாடு கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். போதை ஊசிகளை பகிர்ந்துகொள்வது எச்.ஐ.வி, ஹெபடைட்டஸ் சி மற்றும் பிறருடைய இரத்தம் மூலம் பரவும் தொற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பால்வினை நோய்கள் பரவுவதற்கும் வழிவகுக்கிறது.
போதைப் பழக்கம் பெரும்பாலும் மோசமான ஊட்டச்சத்தை அளிப்பதுடன் உடல் நலனையும் புறக்கணிக்க வைக்கும். மேலும், போதைக்கு அடிமையான நபர்கள் சுகாதாரத்தையும் புறக்கணிப்பர். அதனால் அவருக்கு பலவித நோய்கள் உருவாகும். அளவுக்கு அதிகமான போதைப் பழக்கம் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மன நலக் கோளாறுகள்: போதைப் பழக்கம், மனச்சோர்வு, பதற்றம், சித்தப்பிரம்மை, மனநோய் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் தற்கொலை எண்ணத்தையும் தூண்டும். நீண்ட காலமாக போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவரின் மனக்கூர்மை குறையும். அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும். அவரால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றல் வெகுவாக பாதிக்கப்படும். ஒழுங்கற்ற மனநிலை காரணமாக எப்போதும் எரிச்சல், ஆக்ரோஷம், கிளர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாவார்கள். இவர்கள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதும் மிகவும் கடினம்.
இத்தனை நாட்களாக மகிழ்ச்சியைத் தந்த செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்குகள் கூட ஆர்வத்தை இழக்கச் செய்யும். எதிலும் அக்கறையின்மை நிலவும். அலுவலகப் பணிகள் எதிலும் கவனம் செலுத்தவே முடியாது. போதைப் பழக்கம் காரணமாக குற்ற உணர்வு, அவமானம் போன்ற உணர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லும்.
சட்டம் / சமூகத்தின் பார்வையில்: சமூகத்தின் பார்வையில் மரியாதை குறையும். நல்ல நட்புகள் உறவுகள் விலகிச் செல்வார்கள். தன்னைப்போலவே போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். இது இன்னும் ஆபத்தை வரவழைக்கும். போதையில் வாகனம் ஓட்டுதல், மனதுக்குத் தோன்றியதை செய்தல் தண்டனைக்குரிய குற்றச்செயல்கள் போன்ற ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடுவதற்கு வழிசெய்யும். போதைப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது விநியோகம் செய்தாலோ குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனைகளும், அபராதம், குற்றவியல் பதிவு ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.
குடும்பத்தினருக்கு பாதிப்பு: போதைப் பழக்கத்தால் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் அல்லாமல், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். தங்கள் அன்புக்குரியவர் நல்வாழ்வு குறித்து கவலை, பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிக்கிறார்கள்.
மேலும், கடுமையான குற்ற உணர்வுக்கும், அவர்கள் பிறரால் ஒதுக்கி வைக்கப்படக்கூடிய நிலைமையும் உருவாகும். குழந்தைகள் பெற்றோர்களின் போதைப் பழக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடலாம். இது நீண்ட கால உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
போதைக்கு அடிமையான கணவன் அல்லது மனைவிக்குள் பிரச்னை உண்டாகி அவர்கள் இருவரும் பிரியும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவாகரத்து, பிரிவு போன்ற காரணங்களால் அவர்களது இரு குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்களது வேலைக்கு சரியாகச் செல்லாமல் வேலை இழப்பு ஏற்படும்.
இதனால் பொருளாதார சரிவு ஏற்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகும். பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இத்தனை நாட்களாக சமூகத்தில் அவர்கள் சம்பாதித்த மரியாதை, மதிப்பு, அந்தஸ்து அத்தனையும் இழப்பார்கள். எனவே, இத்தகைய பேரழிவைத் தரும் போதைப்பொருள் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.