

உலகின் 7வது பெரிய கடற்படை கொண்ட நாடு இந்தியா. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய 300க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், 190 கப்பல் படை போர் விமானங்கள் இதில் உள்ளன. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசுதான் இந்திய கப்பல் படையை உருவாக்கியது.
விசாகப்பட்டினத்தில் 1941ல் அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1946ல் இரு கப்பல் கட்டும் தளங்களும் அதற்குத் தேவையான தொழிற்சாலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதை 1952ல் இந்திய அரசு ஏற்று, ‘இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்’ என்ற நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. இதன் முதல் முயற்சியானது அதன் முதல் திட்டமான SS ஜல உஷாவுடன் தொடங்கியது. இது 8,000 டன் எடையுள்ள நீராவிக் கப்பல். இது மார்ச் 14, 1948 அன்று ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது.
இந்தியக் கப்பல் பதிவாளர் (IRS) அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்திய போர் கப்பல்களின் பெயருக்குப் பின்னால் INS என்று இருக்கும் (Indian Naval Ship). நம் நாட்டின் முதலாவது போர்க் கப்பலை 1968ம் ஆண்டு அக்டோபர் 23ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இயக்கி வைத்தார். அந்தக் கப்பலின் பெயர் நீலகிரி.
INS -அம்பா நீர் மூழ்கி கப்பல்களுக்கெல்லாம் தாய்க் கப்பல் 1974ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதை, ‘நீர் மூழ்கிக்கிடங்கு கப்பல்’ என்பர். INS - கல்வரி 1971ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் 30 நாட்கள் கடலுக்கு அடியில் இருந்த நீர்மூழ்கிக் கப்பல். கல்வரி என்பது ஒரு வகை திமிங்கலத்தின் பெயர். இந்தப் போரில் இந்தியா வெல்ல காரணமாக இருந்தது கல்வரி. இந்த வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 4ந் தேதி இந்திய கப்பற்படை தினம் 1971ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
தளபதி காசர்கோடு பட்னசெட்டி கோபால் ராவ் (Kasargod Patnashetti Gopal Rao) மகாவீர் சக்கரம், விசிட்ட சேவா பதக்கம் (13 நவம்பர் 1926 - 9 ஆகஸ்ட் 2021) பெற்ற ஓர் இந்தியக் கடற்படை அதிகாரியாவார். இவர், இந்திய - பாகிஸ்தான் போரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்தார். இந்தப் போரில் கராச்சி துறைமுகத் தாக்குதல் மிக முக்கியமானது.
பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக துருப்புகளும், ஆயுதங்களும் வர வழியில்லாமல் செய்தார். இதனால் லட்சக்கணக்கான கிழக்கு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்த திரிசூலம் படை நடவடிக்கைக்காக இவருக்கு முதல் முறையாக மகாவீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.
இந்தியா 1961 முதல் போர்க்கப்பல்களைப் பயன்படுத்துகிறது. பழைய ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட அவை எதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. 1961 மற்றும் 1987ம் ஆண்டுகளில் கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விராட் ஆகியவை ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டன. ஐஎன்எஸ் விராட் உலகிலேயே அதிக காலம் சேவை செய்த போர்க்கப்பல் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. விராட், 27,800 டன் எடையுள்ள சென்டார் வகை விமானம் தாங்கி போர்க்கப்பல்.
இந்தியாவின் முதல் போர் கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய தொழில்நுட்பத்தில் 1989ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டு, 1992 பிப்ரவரி 7ல் இந்திய கப்பல் படையில் சேர்ந்தது. ஐஎன்எஸ் விபோதி இந்தியாவில் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான முதல் ஏவுகணை கப்பல். மும்பை முகாம் டக்கில் 1991 ஏப்ரல் 26ல் உருவாக்கப்பட்டது.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் நீர் மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் சக்தி மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் மூலம் 1989 செப்டம்பரில் துவக்கப்பட்டு 1992 பிப்ரவரி 7ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கேரளாவில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்டில் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
‘தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் கொண்ட'பிராஜெக்ட் 17ஏ' திட்டத்தின்படி, அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ‘பிராஜெக்ட் 17ஏ' திட்டத்தின்படி, கடந்த 11 மாதங்களில் நம் கடற்படைக்கு 4 கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, நீலகிரி பிரிவில் நான்காவது கப்பலான தாராகிரி, இது எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறன் வாய்ந்தது. எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் உடைய ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மீதமுள்ள மூன்று கப்பல்கள், அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.