

மும்பையைச் சேர்ந்த 16 வயதான வீர் கஹ்ரோத்ரா, புடாபெஸ்டில் நடைபெற்ற போல் மற்றும் ஏரியல் ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜூனியர் பி அமெச்சூர் ஆண்கள் ஏரியல் சில்க்ஸ் பிரிவில் போட்டியிட்ட வீர் கஹ்ரோத்ராவின் இந்த வெற்றி, சர்வதேச ‘ஏரியல் ஸ்போர்ட்ஸ்’ அரங்கில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இந்த வருடம், போல் மற்றும் ஏரியல் ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் ஏரியல் சில்க் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியா அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம், இந்த உலகளாவிய நிகழ்வில் இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
ஜூனியர் பி அமெச்சூர் ஆண்கள் (15-17 வயது) ஏரியல் சில்க் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய, மும்பையைச் சேர்ந்த 16 வயது வீரர் வீர் கஹ்ரோத்ரா இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
உக்ரைன், ஹங்கேரி மற்றும் செக் குடியரசு போன்ற, நன்கு நிறுவப்பட்ட ஏரியல் விளையாட்டுச் சூழல்களைக் கொண்ட நாடுகளின் வீரர்களுக்கு எதிராகப் போட்டியிட்ட வீர் கஹ்ரோத்ரா, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான ஒரு களத்தில் வெற்றிபெறும் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏரியல் சில்க் என்பது செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஏரியல் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவாகும். இதற்கு கணிசமான மேல் உடல் வலிமை, சகிப்புத்தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் கலைநயமிக்க கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இது ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பாரம்பரிய இந்திய கயிறு மல்லக்கம்பம் ஆகியவற்றுடன் ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், இந்த விளையாட்டு தற்போது இந்தியாவில் பிரதான, அரசுடன் இணைக்கப் பட்ட விளையாட்டு கட்டமைப்புகளுக்கு வெளியே உள்ளது.
சாம்பியன்ஷிப் மட்டத்தில், பயிற்சிகள் அவற்றின் கடினத்தன்மையை மட்டும் கொண்டு மதிப்பிடப்படாமல், தொழில்நுட்பத் துல்லியம், செயல்பாடு மற்றும் கலைநயமிக்க தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. வீர் கஹ்ரோத்ராவின் தங்கம் வென்ற செயல்முறை, அதன் கட்டுப்பாடு, நிலைத்தன்மை மற்றும் சோர்வின் கீழும் காட்டிய நிதானம் ஆகியவற்றால் தனித்து நின்று, நடுவர்களிடமிருந்து சிறந்த மதிப்பெண்களைப் பெற்றது.
இந்தச் சாதனை குறித்துப் பேசிய வீர் கஹ்ரோத்ரா, “எனது பெற்றோர், எனது பள்ளி (திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி) மற்றும் எனது பயிற்றுனர்களான ராஜ்முத்ரா லோக் மற்றும் மசூமா முன் ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் வழிகாட்டுதல், போட்டி நாளன்று நான் கவனம் சிதறாமல் சிறப்பாகச் செயல்பட உதவியது. மேலும், இந்த வெற்றி ஒரு தனிப்பட்ட மைல்கல்லை விட மேலானதாகும்"
ஏரியல் சில்க் விளையாட்டு இந்தியாவில் உள்ள இளம் விளையாட்டு வீரர்கள் தனித்துவமான விளையாட்டுகளை ஆராய்வதற்கும், பிரதான நீரோட்டத்திற்கு அப்பாற்பட்ட துறைகளை ஆதரிப்பதன் மூலம் நாடு உலகளவில் அங்கீகாரம் பெறுவதற்கும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகும்.
உபரி தகவல்கள்:
ஏரியல் சில்க் என்பது கூரையில் இருந்து தொங்க விடப்பட்ட ஒரு சிறப்பு துணியைப் பயன்படுத்தி காற்றில் உடற்பயிற்சிகளையும், அக்ரோபாட்டிக்ஸ் எனப்படும் சாகசங்களையும் செய்யும் ஒரு கலை வடிவமாகும். இதை வான்வழி பட்டு அல்லது ஏரியல் துணி நடனம் என்றும் அழைப்பார்கள்.
இதற்கென பயன்படுத்தப்படும் துணி, பட்டுப்போன்ற மென்மையான, அதே சமயம் அதிக எடையைத் தாங்கக்கூடிய வலுவான நைலான் அல்லது பாலியஸ்டர் துணியால் ஆனதாக இருப்பது அவசியம். கலைஞர்கள் துணியைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுதல், காற்றில் சுழலுதல், உடலை வளைத்தல் மற்றும் தலைகீழாகத் தொங்குதல் போன்ற பல வடிவங்களை உருவாக்குவார்கள்.
பாதுகாப்பிற்காக, தரைப்பகுதியில் தடிமனான மெத்தைகள் போடப் பட்டிருக்கும். ஆரம்பக்கட்டத்தில் பயிற்சியாளரின் வழிகாட்டுதல் அவசியமாகும்.
நன்மைகள்:
உடல் வலிமை, கைகள், கால்கள் மற்றும் முக்கிய வயிற்றுப் பகுதி தசைகளை பலப்படுத்துகிறது. உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை (Flexibility) கணிசமாக அதிகரிக்கிறது. உடலின் சமநிலையை மேம் படுத்துவதோடு, கவனத்தை ஒருமுகப்படுத்தவும், பயத்தைப் போக்கவும் உதவுகிறது.
வீர் கஹ்ரோத்ராவின் 14 வயது சகோதரி விஹா கஹ்ரோத்ரா, கான்ட்ராக்ட் பிரிட்ஜ் விளையாட்டில் உயர்மட்டத்தில் போட்டியிட்டு, சீனாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பட்டத்தை வென்றுள்ளார்.
சகோதரனும் சகோதரியும் அவரவரது விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடி, பரிசு பெற்றுள்ளது பாராட்டுக்குரிய செயலாகும்.