
உலகில் ஒவ்வொருவருக்கும் தேவையான அளவில் சுத்தமான உணவு கிடைக்க வேண்டும். இது ஒரு அடிப்படை உரிமை என்று ஐ.நா. சபை கூறுகிறது. பசியையும், நோய்களையும் விரட்ட வேண்டும் என்பது உலக நாடுகளின், தனி மனித கனவு, ஆசை, விருப்பம். அடிப்படையான மனித நேரத்தை ஆதாரமாகக் கொண்டே இந்த எண்ணம் வலுப்பெறுகிறது.
ஒரு மனிதன் கூட பசியால் வாடக் கூடாது என்பதை நோக்கியே உலகம் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நகர்வின் முக்கிய திருப்பமாக,1945ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி அன்று கனடாவில் உள்ள கியூபெக் நகரில் உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் (எப்.ஏ.ஓ) நிறுவப்பட்டது. ஊட்டச்சத்தற்ற உணவுக்கும், பசிக்கும் எதிராக மனித சமூகம் எடுத்த முக்கிய நடவடிக்கை இது. இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும், பட்டினியை ஒழிக்கும் விதமாகவும் ஆண்டு தோறும் உலக உணவு தினம் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
1979ம் ஆண்டு முதல் சர்வதேச உணவு தினம் கொண்டாட ஐ.நா. வலியுறுத்தியது. அது முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் வறுமை மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்குவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம். உலகளவில் நிலவி வரும் பசி தொடர்பான விழிப்புணர்வை உலக நாடுகளில் பரவலாக்கவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைவான உணவு, பசி போன்ற பிரச்னைகளுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளை ஒன்றிணைத்து விவசாய உற்பத்தியில் வளர்ச்சி காணச் செய்வதும் இந்த நாளின் நோக்கம்.
தற்போது உலக உணவு தினம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு உற்பத்தியில் புதுமைகளை செய்து உணவுப் புரட்சி செய்திட உதவும் அறிஞர்களுக்கும், அமைப்பிற்கும் இந்த நாளில்தான் உலக உணவு விருதும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த விருதினை முதல் முறையாக பெற்றவர் ஓர் இந்தியர் என்பது நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று.
உலக உணவுப் பரிசு (World Food Prize) என்பது உலக உணவுத் தரம், அளவு, கிடைக்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் மனித வளர்ச்சியைப் பாராட்டும் ஒரு சர்வதேச விருதாகும். பயிர் மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில், குறைவான ரசாயனங்களைப் பயன்படுத்தி உணவு வளர்ப்பில் முன்னோடியாக இருந்ததற்காக 2025ம் ஆண்டுக்கான உலக உணவுப் பரிசை பிரேசில் விஞ்ஞானி மரியங்கெலா ஹங்ரியா வென்றார். இந்த விருது, நோபல் பரிசுக்கு நிகராக உணவு மற்றும் விவசாயத் துறையில் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.
அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, குறைந்த வருமானம் போன்றவற்றால் சாதாரண குடும்பத்தினர் வறுமையில் சிக்குகின்றனர். வறுமையும், பட்டினியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக உள்ளன. சர்வதேச உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பின் சர்வேபடி உலகளவில் ஒவ்வொரு நாளும் 100 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியால் கஷ்டப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
பசியால் வாடுபவரே உலகில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே உலக உணவு அமைப்பு, உலக உணவு தினம் போன்றவற்றின் நோக்கம். இதற்காகத்தான் ஐ.நா. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை முன்னிட்டு ஒரு மையக்கருத்தை வைத்து அதை நோக்கிச் செயல்படுகிறது. 2025ம் ஆண்டின் உலக உணவு தினத்தின் கருப்பொருள் ‘நீர்தான் வாழ்க்கை, தண்ணீரே உணவு - யாரையும் பின்னால் விடாதீர்கள்’ என்பதாகும். இந்த நாள், நீர் மற்றும் உணவின் இன்றியமையாத தொடர்பையும், அனைவருக்கும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் மக்கள், பொருளாதாரம் மற்றும் பூமியின் நலன்களை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.
உலகெங்கும் 30,000 வகையான மனிதர்கள் உண்ணத்தக்க வகையிலான தாவரங்கள் இருந்தபோதிலும் உலகெங்கும் விவசாயிகள் பயிரிட்டுப் பயன் பெறுவது வெறும் 170 வகையான உண்ணும் தாவரங்களைத்தான் என்கிறார்கள் உலக பொருளாதார மைய ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக, நாம் சாப்பிடும் வாழைப்பழத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1000 வகைகள் இருந்தாலும், உலகெங்கும் பயிரிடப்படுவடுவது என்னவோ ‘காவண்டிஸ்’ எனும் வகை வாழைப் பழத்தைத்தான்.
உலகெங்கும் உள்ள மக்கள் தங்களின் 40 சதவீத தினசரி கலோரி உணவை அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் எனும் மூன்று தானியங்களில் இருந்துதான் பெறுகிறார்களாம். மற்றவற்றை 30 வகையான இதர தானியங்களில் இருந்து மட்டுமே பெறுகிறார்களாம். 170 வகையான தாவரங்கள் வியாபார நோக்கில் பயிரிடப்படுகிறது. அதில் வாசனை திரவியங்கள், மசாலா அயிட்டங்கள், காபி, டீ போன்ற பானங்கள் சம்பந்தமான வகைகளும் அடங்கும். இதனைத் தவிர்த்து 7000 வகையான தாவரங்கள் மட்டும் உலகெங்கும் பாரம்பரியமாக உணவுக்கு என பயிரிடப்படுகிறது. ஆனால், உணவு பயன்பாட்டிற்கென 30,000 வகையான தாவரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளனவாம்.
உலகில் உள்ள 57 கோடிகளுக்கும் மேற்பட்ட வயல்களில் 50 கோடிக்கும் மேற்பட்ட வயல்களில் வேலை பார்த்து வருவது அந்த வயலுக்கு சொந்தமான குடும்பங்களே. அந்த குடும்ப விவசாயமே நாட்டின் சரிவிகித உணவுக்கு பங்களிக்கிறது. இயற்கை வளத்தையும், பாரம்பரிய உணவுப் பொருட்களையும் பாதுகாக்கிறது.