பத்து மரணங்களில் ஆறு மரணங்கள் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்கிறது ஒரு மருத்துவ சர்வே. இன்றைய அதிவேக வாழ்க்கையில் நமது சீரற்ற உணவுப் பழக்கங்களே நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதில் முக்கியமாகிறது. முக்கியமாக, உணவுகளில் சுவையூட்டியாக சேர்க்கப்படும் கலப்படங்கள் நமது உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
‘உணவே மருந்து’ என்னும் அளவுக்கு நமது ஆரோக்கியத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் உணவுகளில் அதிக கவனம் வேண்டும். சமீபத்தில் குழந்தைகள் விரும்பும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அனுமதிக்கப்படாத செயற்கை நிறமி கண்டறியப்பட்டு இதை தடை செய்ததை அறிவோம். ஆனால், சில இடங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளைக் கலந்து சிக்கன், சிக்கன் 65 ,கோபி மஞ்சூரியன், காலிஃப்ளவர் சில்லி போன்ற உணவுப் பொருட்கள் விற்பனையாவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே அனுமதிக்கப்படாத செயற்கை நிறமி சேர்க்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
உணவுப் பொருட்களை சில இடங்களில் காகிதங்களில் வைத்துப் பரிமாறுகின்றனர். இதில் இருக்கும் நச்சு மையில் உள்ள காரியம் போன்ற வேதிப்பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. உணவுப் பொருட்களை காகிதங்களில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளதை அறிவோம். எனவே, உணவுப் பொருட்களை கேடு தரும் பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சிலர் சிக்கனத்தைக் கருதி பொறிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவார்கள். இது எவ்வளவு ஆபத்து தெரியுமா? இப்படி பயன்படுத்தும்போது அதில் கொழுப்பு சத்து அதிகமாகி மாரடைப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும் வாய்ப்பு உண்டு. எனவே, அதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
உப்பு, எண்ணைய் மற்றும் இனிப்பு ஆகியவற்றை குறைவாக எடுத்துக்கொண்டால் இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்பது பொதுவாகவே மருத்துவம் பரிந்துரைக்கும் ஒன்று. எனவே, நமது உணவில் உப்பு, எண்ணெய் மற்றும் இனிப்பைக் குறைத்துக்கொள்ள உறுதிமொழி ஏற்போம்.
மேற்சொன்னவற்றைத் தவிர்த்து தகுந்த உடற்பயிற்சியுடன், பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களையும், இயற்கையோடு கூடிய உணவு முறைகளையும் கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுள் பெற முடியும்.