தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. பழங்களில் உள்ள சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக தருபவை. பழங்களில் உள்ள குளுக்கோஸ் உடனடி ஆற்றலாக மாற்றப்படுவதால் குழந்தைகள், வளரும் பருவத்தினர், அதிக உடல் உழைப்பு கொண்டவர்கள் கட்டாயம் தினசரி பழங்களை உட்கொள்ள வேண்டும்.
நோய்வாய் பட்டவர்கள் விட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயிலிருந்து விடுபட முடியும். இதனால் தான் நோயாளியை பார்க்க விரும்பும் அன்பர்கள் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை போன்ற பழங்களை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். பழங்களை உண்ணுவதற்கு சில சரியான முறைகள் உள்ளன. அவ்விதம் பழங்களை உட்கொண்டால் ஊட்டச்சத்து இழப்பின்றி ஆற்றலை பெற முடியும். பழங்களை சில தவறான முறையில் உண்ணும் போது ஊட்டச்சத்துகள் சரிவர கிடைப்பதில்லை. மேலும் சில தீங்குகள் கூட நேர்கின்றன. பழங்களை சாப்பிடும்போது நாம் சில தவறுகளை தவிர்க்க வேண்டும்.
1. தோலை உரிக்க கூடாது :
பொதுவாக பழங்களை தோலை உரித்து தான் சாப்பிட வேண்டும். ஆனாலும் பழங்களில் தோலில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன. எல்லா பழங்களின் தோலையும் உட்கொள்ள முடியாது. ஆயினும் ஆப்பிள், கொய்யா, திராட்சை, பெர்ரி, செர்ரி போன்ற மெல்லிய தோலை கொண்ட பழங்களை தோலோடு சாப்பிட்டால் தான் முழுப் பலனும் கிடைக்கும். இந்த பழங்களின் தோல்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளன. தோலுடன் சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும்.
2. வெட்டிய உடனே சாப்பிடுங்கள் :
பழங்களை வெட்டி நீண்ட நேரம் வெளியே வைப்பதோ அல்லது குளிர்சாதன பெட்டியில் நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்வதால் விட்டமின்களை பழங்கள் இழக்கிறது. நறுக்கிய சில நிமிடங்களில் இரசாயன மாற்றத்தில் பழங்களின் நிறம் மாறும், இதன் பின் பழங்களை உட்கொள்வதால் ஒரு பயனும் இல்லை.
3. பழங்களை தனியாக உண்ணவும்:
பழங்களை எப்போதும் தனியாக சாப்பிட வேண்டும்; வேறு ஏதேனும் உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடக் கூடாது. பழங்கள் விரைவாக சிதைவடையக் கூடியவை, அவை மற்ற உணவுகளுடன் கலக்கும்போது செரிமானத்தை மிகவும் கடினமாக்கும். அதனால், உடலில் அமாடாக்சின்கள் உருவாக வழிவகுக்கும். மற்ற உணவுகளுடன் பழங்கள் கலந்து உண்ணும் போது, மற்ற உணவுகள் செரிக்கும் வரை பழங்கள் வயிற்றில் தங்கி இருப்பதால் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தாமதாக்குகிறது. அதனால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். மேலும் எதிர் தன்மை கொண்ட பழங்களை உண்பதால் அமிலத்தன்மை அதிகரிக்கும். எனவே, பழங்களை தனித்தனியாக சாப்பிடுவது நல்லது. மேலும் பழங்களில் சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு, சிரப்கள் கலந்து உண்பதால் தீமை மட்டுமே ஏற்படும்.
4. தண்ணீர் குடிப்பது :
அதிக நீர்சத்து கொண்ட பழங்களை சாப்பிட்ட பின் உடனடியாக தண்ணீர் பருக கூடாது. பொதுவாக பழங்களில் நீர்சத்து இருக்கும். அதனால் பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க தேவை இல்லை. பழங்கள் சாப்பிட்ட உடனடியாக தண்ணீர் குடித்தால் அது செரிமான மண்டலத்தின் சமநிலையை பாதிக்கும்.
5. பழங்களை தவிர்க்கும் நேரம் :
இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழங்களின் வழியாக கிடைக்கும் ஆற்றல் உங்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டி தூக்கத்தை கெடுக்கும் அல்லது இரவு நேரத்தில் அமிலத் தன்மையையும் ஏற்படுத்தலாம் .