நடைப்பயிற்சி ஒரு ஆரோக்கியமான வழக்கமாகும். ஆனால், ஒவ்வொரு நாளும் நடக்கும்போது நாம் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்வது உடலுக்குக் கூடுதல் பலன்களைத் தரும். தினமும் ஒரே மாதிரி நடப்பதைக் காட்டிலும், நடைப்பயிற்சியில் சற்று மாற்றி நடப்பது நல்லது. அதாவது, நடையின் வேகம், நடையின் தோரணை, நடக்கும் நிமிடங்கள் போன்றவற்றை அவ்வப்போது மாற்றலாம்.
இடைவேளை நடைப்பயிற்சி: இது அதிதீவிர நடைப்பயிற்சியாகும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை மாறி நடக்கும் பயிற்சியாகும். இந்தப் பயிற்சியால் நீங்கள் வழக்கமாக நடப்பதை விட இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும். நடைப்பயிற்சிக்கு முன் வார்ம் அப் பயிற்சிகளைச் செய்து உடலை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்க வேண்டும். பின்னரே நடக்கத் தொடங்க வேண்டும்.
இடைவேளை நடைப்பயிற்சி என்றால் என்ன?
ஜப்பானிய முறையில் முதல் மூன்று நிமிடங்கள் அதிவேகமாகவும், அடுத்த மூன்று நிமிடம் மித வேகமாகவும் நடக்கிறார்கள். உங்களால் அதைப் பின்பற்ற முடியாவிட்டால் 30 வினாடிகள் மெதுவாக நடந்து விட்டு பிறகு 30 வினாடிகள் வேகமாக நடக்கலாம். அல்லது 30 வினாடிகள் மெதுவாக ஓடலாம்.
நீங்கள் கூடுதல் பலன் பெற விரும்பினால் சுமார் 1 முதல் 5 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். பின்னர் 60 வினாடிகள் ஓட வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்றவாறு மிதமான வேகத்தில் ஓடலாம். இப்படி 30 முதல் 40 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக பயிற்சி செய்யலாம். ஓட்டத்திற்கும் நடைக்கும் இடையேயான இடைவெளியையும் அதன் வேகத்தையும் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இடைவேளை நடைப்பயிற்சியின் பலன்கள்:
ஆயுள் அதிகமாகும்: உங்கள் நோய்கள் குறைந்து ஆயுள் அதிகரிக்கும். இதயம், எலும்பு, தசைகள், சுவாச மேம்பாடு என அனைத்து உறுப்புகளையும் மேம்படுத்தி புதிய நோய்கள் வராமல் தடுக்கவும் இந்த இடைவேளை நடைப்பயிற்சி உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: இந்தப் பயிற்சி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். தசைகள் வலுவாகும். கொழுப்பு கரையும். வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால் அதிகக் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் எடை குறையும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. இந்த நடைப்பயிற்சியில் ஓட்டம், நடை என்று இரண்டும் உள்ளதால் ஆழ்ந்த தூக்கம் கிடைத்து மனச்சோர்வு நீங்கும். மன அழுத்தம் குறையும்.