இந்தக் கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்ற, உடலுக்கு ஆரோக்கியம் தராத உணவுப் பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இது ஒரு சாதாரணப் பழக்கமாக இருந்து, பின்னர் தினசரி அடிக்கடி எடுத்துக் கொள்ளும் ஒரு போதைப் பழக்கமாகவே மாறிவிடுகிறது. இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் செய்தால் , நாளை உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைப்பதாக இருக்கலாம்.
சமீபத்திய ஆய்வுகளின் படி, சிப்ஸ் மற்றும் குளிர்பான உணவுப் பொருட்களின் மீதான ஈர்ப்பு, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினர் பலரும் சிப்ஸ், பிஸ்கட், குளிர்பானங்கள், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் , பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றின் மீது பெரிய மோகத்தில் உள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் அதிக அளவில் மக்களை அடிமையாக்கும் திறன் கொண்டவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை மனித மூளையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அந்த ருசியை மிகவும் விரும்ப செய்து, மீண்டும் மீண்டும் விரும்பி சாப்பிடும் ஒரு வழக்கமாக மாற்றி விடுகிறது. இந்த பழக்கம் மது, சிகரெட் மற்றும் ஒரு சில போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மனநிலைக்கு இணையாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள், அவற்றின் ஈர்ப்புமிக்க சுவை காரணமாக, மக்களை அடிக்கடி சாப்பிட வைக்கிறது. அவற்றின் சுவை மக்களை அதிகப்படியாக விரும்பும் வகையில் தயாரிக்கப்படுகிறது. என்னதான் வயிறு முழுக்க உணவுப் பொருட்கள் நிரம்பியிருந்தாலும், இந்த உணவைப் பற்றிய ஞாபகம் வந்தவுடன் மேலும் மேலும் உண்ண வேண்டும், என்ற ஆர்வம் அவர்களுக்கு அதிகரிக்கும். இந்த ஆர்வம் ஒரு போதை பழக்கமாக மாறுகிறது.
இந்த போக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார நிறுவனர் பெரிதும் கவலை அடைகின்றனர். ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளின் படி, குளிர்பானம் மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளும்போது, டோபமைன் போன்ற ரசாயனங்கள் மூளையில் வெளியிடப்படுகின்றன. டோபமைன் மகிழ்ச்சி மற்றும் அதிகப்படியான ஆர்வத்தை ஒரு பொருளின் மீது தூண்டுகிறது.
இந்த செயல்பாடு புகையிலை மற்றும் நிகோடின் நுகர்வின் போதும் நடைபெறுகிறது. இந்த அனுபவத்தை மூளை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்புகிறது.
மேலும், இந்த உணவு பொருட்கள் உடலுக்கு அதிகப்படியான தீங்குகளை விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவில் கொழுப்பு , கார்போஹைட்ரேட், உப்பு, சர்க்கரை ஆகியவை கலந்துள்ளன. இவற்றில் உள்ள சுவை, அமைப்பு, நறுமணம் ஆகியவை அனைவரையும் அடிமையாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் தினசரி வழக்கமாக மாறி, கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.
இந்த உணவுகளை அதிகளவில உண்ணும் போது, உடலின் செரிமான மண்டலம், கணையம், கல்லீரல் வரை அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக உடல்பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இதில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை கொண்டது. இவற்றில் ஊட்டச்சத்துகள் மிகக் குறைவாகவும் கெட்ட கொழுப்பு மற்றும் சோடியம் அதிகளவில் இருக்கும். இது உடல் ஆரோக்கியத்தில் நீண்ட காலம் மோசமான தாக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது.