

தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வர முகம், கூந்தல் மற்றும் சரும பாதுகாப்புக்கு பலன் அளிக்கிறது. மேலும் பல்வேறு உடல் நலக்கோளாறுகளை சரிசெய்ய வல்லது இந்த சீரக குடிநீர்.
தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகத்தை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி ஆற வைத்து குடிப்பதே சீரக குடிநீர். இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
சீரக குடிநீர் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வயிற்று வலியைப் போக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். சளியைக் குணப்படுத்தி சுவாசத்தை எளிதாக்குகிறது. சீரகத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.
வளர்சிதை மாற்றத்திலும் பங்கு வகிக்கிறது. நச்சுகளை வெளியேற்றி பித்தப்பை செயல்பாட்டை சரிசெய்கிறது. இரும்புசத்து குறைபாட்டை நீக்குகிறது.
சரும பளபளப்புகிற்கும் சீரக குடிநீர் உதவுகிறது. இதில் பொட்டாசியம் மட்டுமன்றி கால்சியம், செலினியம், மாங்கனீசு உள்ளிட்டவை உள்ளன. இவை தோலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு பளபளப்பை யும் தருகிறது. சீரக நீருடன் மஞ்சள்தூள் கலந்து முகத்தை கழுவிட முகம் பளபளப்பாக இருக்கும்.
சீரகத்தில் விட்டமின் ஈ சத்து உள்ளது. அது இளமையை தக்க வைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின் வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.
இவ்வாறு சீரகம் பெயருக்கேற்றவாறு அகத்தை சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.