தற்போது பலரையும் ஆட்டிப்படைத்து வரும் உடல் பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ளது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் ஆகும். பெயரிலேயே சர்க்கரையைக் கொண்டிருந்தாலும், இந்த உடல் பிரச்னையைக் கேட்டாலே பலருக்கு பாகற்காய் கசப்புதான். ஆம், சர்க்கரை நோய் வந்துவிட்டால் இனிப்புகளை சாப்பிட முடியாது எனும் வருத்தம்தான் காரணம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சரி, ஆனால் அதிக இனிப்புகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா எனும் சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நமது மரபணு மற்றும் சூழல் காரணமாக உணவுப் பழக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். கார உணவுகள் சிலருக்குப் அதிகம் பிடிக்கும். சிலர் காரம் என்றாலே காததூரம் தள்ளி இனிப்புகளை அதிகம் விரும்புவார்கள். நமது உடல் அதற்கு தேவைப்படும் சத்துக்களை சுட்டிக்காட்டி அதை உணவாக எடுக்கத் தூண்டும் என்கிறது இயற்கை மருத்துவம். உதாரணமாக, மாங்காய் அதிகம் பிடிக்கிறது என்றால் அதில் உள்ள சத்துகளை நமது உடல் கேட்கிறது என அர்த்தம்.
அந்த வகையில் அதிக இனிப்பு சாப்பிடுவதால் பொதுவாக யாருக்கும் நீரிழிவு வராது என்பதுதான் உண்மை. ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் அடிக்கடியும், அதிக அளவிலும் இனிப்பு சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு அதனால் தேவையற்ற கலோரிகள் அதிகமாக உடலில் சேர்ந்து கொழுப்பு அளவு அதிகரிக்கும். அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும். எந்த ஒரு உடல் நல பாதிப்பிற்கும் முதல் அடிப்படைக் காரணமாக அமைகிறது அதிக உடல் பருமன்.
ஆகவேதான், உடல் பருமன் அதிகரிப்பதன் விளைவாக அந்த நபருக்கு நீரிழிவு பிரச்னை வர வாய்ப்புகள் 100 சதவிகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பிரச்னை பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது என்கின்றனர்.
இனிப்பு அதிகமாக சாப்பிடுவதால் ஒரு வகையில் அதிக கலோரி என்பதால் மறைமுகமாக சர்க்கரை நோய்க்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் இணைவதால் நீரிழிவு பாதிப்பு தோன்றலாம். குறிப்பாக, உடல் உழைப்பு இன்மை, பசியற்ற நேரத்திலும் துரித உணவுகளுக்கு அடிமையாகி உணவுகளை திணிப்பது, ஹார்மோன்களை பாதிக்கும் மனப்பதற்றம், தூக்கமின்மை, பரம்பரை மரபு போன்ற காரணங்கள் முக்கியமானது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. நாம் இனிப்புகளை உண்டதும் இரத்தத்தில் சர்க்கரையின் (க்ளுக்கோஸ், ஃப்ரக்டோஸ்) அளவு ஏறும். இதை கட்டுப்படுத்தவே கணையம் இன்சுலினை சுரக்கிறது. இந்த சுரப்பு வாழ்நாள் முழுக்க தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். ஒரு கட்டத்தில் கணையம் வலிமை குன்றி செயல் இழந்தால் இன்சுலின் சுரப்பு குறையும் அல்லது நின்றுபோகும். இந்த நிலையில்தான் சர்க்கரை நோய் வருகிறது என்கிறது மருத்துவ உலகம்.
இனிப்பு சாப்பிடும்போது மட்டுமல்ல, மாவுப் பொருட்களான அரிசி, கோதுமை போன்றவற்றை சாப்பிட்டாலும் அந்த உணவு சர்க்கரையாக மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த செயல்பாடு, உணவு உண்ட அரை மணி நேரத்தில் துவங்குகிறது என்றும், சீரான நடைப்பயிற்சி உணவு செரிமானத்தை ஊக்குவித்து நீரிழிவு அபாயத்தைத் தடுக்கும் என்கின்றனர்.
ஆகவே, சிறு வயது முதலே இனிப்பு சாப்பிடும் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் கலோரிகள் எரிக்கும் உடற்பயிற்சிகள் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதும் உடல் பருமனாவதும் தடுக்கப்பட்டால் நீரிழிவு அபாயம் குறையும் என்பதுதான் உண்மை.