வாக்கிங் என்பது இருப்பதிலேயே மிகவும் எளிமையான உடற்பயிற்சி. இதற்கென தனியாக உபகரணங்களோ, பெரிய மெனக்கெடல்களோ தேவையில்லை. தேவைப்படுவது எல்லாம் நடை பயிற்சி செய்ய வேண்டுமென்ற மன உறுதி மட்டுமே.
நாம் அறிந்திருப்பது போல நடை பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம் குறையும். கெட்ட கொழுப்பு கரைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கலாம். எலும்புகளை நடை பயிற்சி வலுவாக்கும்.
வாக்கிங் செல்வதால் மேலும் சில நன்மைகளாக ஸ்ட்ரோக் தாக்கி படுத்த படுக்கையாகும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறது. மூளை புத்துணர்வு பெறுவதால் நமது திட்டமிடலும், ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. தினமும் 3500 அடி சுறுசுறுப்பாக நடை போடுபவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் 29 சதவிகிதம் குறைகிறதாம்.
நடை பயிற்சியால் ஆயுள் கூடுகிறது. உடல் பருமன் ஆவது தடுக்கப்படுகிறது. எலும்பு வலுவிழப்பது தவிர்க்கப்படுகிறது. அடிவயிறு தசைகள், கால்கள் வலுவடைகின்றன. முதுமையில் மூட்டு வலி வருவது தவிர்க்கப்படுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் சென்று வர, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
வேகமாக நடப்பதால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கூடி, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. நடை பயிற்சி மனதுக்கு புத்துணர்வைத் தருவதால் நம் மன மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது.
வாக்கிங் செல்வது உடலுக்கு நன்மை தருவது போலவே, சில சந்தர்ப்பங்களிலிருந்து விலகி நடப்பது மனதுக்கு நன்மைகள் தருகிறது. தாழ்வு மனப்பான்மையை விட்டு விலகி நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் மதிப்பை குறைக்கும் செயல்கள், மனிதர்களிடமிருந்து விலகி நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கனவுகளைத் தடுக்கும் தோல்வி பயங்கள், விமர்சனங்களில் இருந்து விலகி நடக்க முயற்சிக்க வேண்டும். மனதையும், அறிவையும் பலப்படுத்தும் நச்சு நினைவுகளிலிருந்து விலகி நடந்து சென்று விட வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ நம் உடலையும், மனதையும் நடை பயிற்சியின் மூலம் உரமாக்குவோம்.