

அவசரமான உலகத்தில் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புரதச்சத்து மாத்திரைகள் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. நல்ல உடல் வடிவமைப்பை விரும்புபவர்கள் இந்த வகையில் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்கின்றனர். ஆனால், இதன் பின்னணியில் உள்ள அபாயங்களை பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை. உடற்பயிற்சி கூடங்களிலும் பயிற்சியாளர் அதிக புரதத்தின் தீமைகளை பற்றி எந்த எச்சரிக்கையும் கொடுப்பது இல்லை. அவர்களின் நோக்கம் வலிமையான தசை அமைப்புகளை உருவாக்குவது தான். ஆனால், அது ஆரோக்கியமான முறையில் உருவாக்கப்பட வேண்டும்.
புரதம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருளாகும். இது தினசரி உணவில் சராசரியாக சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. நல்ல உடல்வாகு வேண்டுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் விரைவாக தசைகளை உருவாக்க, புரதச்சத்தினை அதிகம் விரும்பி எடுத்துக் கொள்கின்றனர்.
புரதம் உடலில் புதிய தசைகளை உருவாக்கவும் அவற்றை வலிமைப்படுத்தவும், திசுக்களை சரி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னதான் நிறைய நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு அதிகமான ஒன்று ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.
உடலுக்கு நன்மை செய்யும் அத்தியாவசிய சில ஊட்டச்சத்துக்கள், அளவுக்கு அதிகமாக உடலில் தேங்கும் போது நமது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் இந்த எதிர்மறை விளைவுகள் ஒருவரின் உயிருக்கே ஆபத்தை கூட ஏற்படுத்த முடியும் அல்லது அவரை நீண்ட கால நோயாளியாகவும் மாற்ற முடியும்.
புரதச்சத்து உடலுக்கு நன்மைகளை செய்தாலும் அது அதிக அளவில் உடலில் தேங்கும் போது, சிறுநீரகங்கள் அவற்றை வடிகட்ட மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. அதிக நேரங்கள் சிறுநீரகங்கள் வேலை செய்வதால் அதன் செயல்பாடுகள் படிப்படியாக குறைய தொடங்குகிறது. இதன் ஆரம்பகட்ட அறிகுறியாக வாயு பிரச்னை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இது அனைவரும் அறிந்தாலும் அதிகப்படியான புரதம் கல்லீரலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் புரதம்:
ஒருவரின் இயல்பான அளவில் புரதச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அது கல்லீரலுக்கு தீங்கினை ஏற்படுத்துவதில்லை. ஆனால் நீண்ட காலமாக புரதச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, உடலின் வளர்ச்சியை மாற்றத்தை பாதித்து கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கலாம். ஏற்கனவே கல்லீரல் பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த வகை மாத்திரைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்:
இதன் முதல் கட்ட அறிகுறியாக வாயுத்தொல்லை, மலச்சிக்கல், அஜீரணம் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை இருக்கும். அடுத்த கட்டமாக அடிக்கடி தாகம் எடுத்தல், சோர்வு , தலைவலி ஆகியவையும் சேர்த்து கொள்ளும். ஒரு சிலருக்கு திடீரென்று உடல் எடை அதிகரிக்கவும் செய்யும். நீண்ட கால புரதச்சத்து மாத்திரைகளின் நுகர்வு, கல்லீரலை பாதிப்பதோடு முதன்மையாக சிறுநீரகத்தையும் பாதிக்கும். ஆரம்பகட்ட அறிகுறிகள் ஏற்படும் போது உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நலமாகும்.
சரியான முறையில் புரதம் உட்கொள்ளல்:
மாத்திரைகளை விட உணவின் வழியே புரதம் எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை குறைக்க கூடியது. வேர்க்கடலை, பாதாம், கொண்டைக் கடலை, பால், தயிர், பன்னீர், முட்டை, இறைச்சி, மீன், இறால் போன்ற உணவுகளில் புரதம் அதிகம் உள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதத்தை ஆரோக்கியமான வழியில் பெற்றுக் கொள்ளலாம்.