

உப்பு நிறைந்த உணவைச் சாப்பிட்ட பிறகு இரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கிறதா? அப்படியானால், நீங்கள் 'உப்பு உணர்திறன்' (Salt Sensitivity) என்னும் நிலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது சாதாரண இரத்த அழுத்த அதிகரிப்பு அல்ல; மாறாக, உடலில் சோடியத்தின் அளவு சிறிது அதிகரித்தாலும், இரத்த அழுத்தம் மிகத் தீவிரமாக உயரும் ஒரு உடல்நிலை ஆகும். பல நேரங்களில் எந்தவித அறிகுறியும் இன்றி இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அமைதியாக அதிகரிக்கிறது.
உப்பு உணர்திறன் என்றால் என்ன?
சோடியம் உட்கொள்ளும் போது இரத்த அழுத்தத்தில் அளவிடக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையே உப்பு உணர்திறன் ஆகும். சாதாரண நிலையில் உள்ள ஒருவரின் உடல், உபரி உப்பைச் சமநிலைப்படுத்திவிடும். ஆனால், உப்பு உணர்திறன் கொண்டவர்களின் உடல், சோடியத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.
இதனால் இரத்த ஓட்டத்தில் திரவத்தின் அளவு அதிகரித்து, இரத்த அழுத்தம் உயர்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் 50% பேரும், சாதாரண இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 25% பேரும் இந்த நிலையைக் கொண்டிருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஏன் இந்த நிலை ஏற்படுகிறது?
உப்பு உணர்திறன் பல உடல் செயல்முறைகளின் மாற்றங்களால் உருவாகிறது. முதன்மையாக, சிறுநீரகங்கள் உபரி சோடியத்தை வெளியேற்றத் தவறும்போது, உடலில் நீர் தேங்கி இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் ஹார்மோன் சமநிலையின்மை (RAAS அமைப்பு) உடலின் உப்பு கட்டுப்பாட்டை பாதிக்கிறது. வயது முதிர்வு அல்லது வாழ்க்கை முறை காரணமாக இரத்த நாளங்கள் நெகிழ்வுத்தன்மையை இழக்கும்போது, சோடியத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் வயது, உடல் பருமன், உடற்பயிற்சி குறைவு மற்றும் மரபணு காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யாருக்கு அதிக ஆபத்து?
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதியவர்கள், சிறுநீரக நோய் கொண்டவர்கள், நீரிழிவு அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த நிலை அதிகமாக காணப்படுகிறது. மேலும், இரத்த அழுத்தம் அடிக்கடி மாறுபடும் நபர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது.
கண்டறியும் அறிகுறிகள்:
உப்பு உணர்திறனை எளிதில் கண்டறிய முடியாது என்றாலும், சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அவை உப்பு நிறைந்த உணவுக்குப் பிறகு வயிறு உப்பசம், கை, கால் அல்லது முகத்தில் வீக்கம், உணவுக்குப் பின் ஏற்படும் தலைவலி, இரத்த அழுத்தத்தில் திடீர் ஏற்ற இறக்கங்கள்.
மறைந்திருக்கும் சோடியம்:
நாம் உணவில் சேர்க்கும் உப்பை விட, பதப்படுத்தப்பட்ட உணவுகளிலேயே அதிக சோடியம் உள்ளது. பேக்கரி பொருட்கள், சிப்ஸ், ஊறுகாய்கள், சாஸ்கள் மற்றும் துரித உணவுகளில் கண்ணுக்குத் தெரியாத சோடியம் ஒளிந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நாளைக்கு 2,000 மி.கி க்கும் குறைவாகவே சோடியம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது.
அவசர நிலையில் என்ன செய்ய வேண்டும்?
அதிகப்படியான உப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட பிறகு சங்கடமாக உணர்ந்தால்:
அதிக தண்ணீர் குடிக்கவும்; இது சோடியத்தை நீர்க்கச் செய்து சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்ற உதவும்.
வாழைப்பழம், இளநீர் போன்ற பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் சோடியத்தைச் சமநிலைப்படுத்த உதவும்.
இரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதிக்கவும். ஒருவேளை இரத்த அழுத்தம் 180/120 mmHg-க்கு மேல் சென்றாலோ அல்லது மார்பு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதற்கான தீர்வு:
உப்பு உணர்திறனை முற்றிலும் மாற்ற முடியாது என்றாலும், சரியான வாழ்க்கை முறை மூலம் கட்டுப்படுத்தலாம்.
சமைக்கும்போது உப்பைக் குறைத்து, அதற்குப் பதிலாக மூலிகைகள் அல்லது எலுமிச்சைச் சாற்றைப் பயன்படுத்தலாம்.
DASH உணவு முறையைப் பின்பற்றலாம் (பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள்).
தினசரி உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
உப்பு உணர்திறன் என்பது உங்களை அறியாமலேயே உங்கள் இதயத்தை பாதிக்கும் ஒரு காரணியாகும். விழிப்புணர்வுடன் உணவைத் தேர்ந்தெடுப்பதும், சோடியம் அளவைக் கட்டுப்படுத்துவதும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)