ஆயிரம் காய்ச்சி பலா மரம் 
பசுமை / சுற்றுச்சூழல்

‘ஆயிரம் காய்ச்சி அதிசய பலா மரம்’ எங்குள்ளது தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

ண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம். பண்ருட்டி பலாவிற்கு தனிச்சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டி பலாவிற்கு என்று மார்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்குக் காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்குக் காரணம் ஆகும்.

செம்மண் பாங்கான பூமியான பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் பலா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். தற்போது பண்ருட்டியில் பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாதபோதிலும் பலா மரங்களில் அதிகளவு காய்கள் பிடித்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் பலாப்பழங்கள் சென்னை, சேலம், மதுரை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பண்ருட்டியில் எவ்வளவு பலாப்பழ மரங்கள் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு மரத்திற்கு சிறப்பு இருக்கும் அல்லவா. ஆம், பண்ருட்டி பகுதியிலும் ஒரு பலாமரத்திற்கு தனிச்சிறப்பு உள்ளது.

பண்ருட்டியில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு பலா மரம் ஆயிரம் பிஞ்சுகள் விடுகிறது. இந்த மரம் தானே புயல் தாக்கியபோதும் விழாமல் நிலைத்து நிற்கிறது.  பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மா, பலா, முந்திரி, கொய்யா, புளி உள்ளிட்ட மரங்களை பராமரித்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் ஒரே ஒரு பலா மரம் மட்டும் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.

Pala Tree

“இந்தத் தோப்பு எங்களது பரம்பரை சொத்தாகும். எனது மூதாதையர்கள் நட்டு வைத்த ஒரே ஒரு பலா மரம் இன்றும் நிற்கிறது. அது நடப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் காய் பிடிக்க ஆரம்பித்ததாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆயிரம் பிஞ்சுகளை விடும். அதில் 350 பிஞ்சுகளை மட்டுமே காயாக மாற விடுவோம். மற்றவற்றை துண்டித்து விடுவோம். ஏனெனில், எல்லா பிஞ்சுகளையும் விட்டால் பருமன் குறைந்து விடும். அதில் 350 பிஞ்சுகளை மட்டுமே காயாக மாற விடுவோம். இந்த மரத்தில் காய்க்கும் பழத்தின் சுவை, மற்ற மர பழங்களை விட இரு மடங்கு அதிக சுவை உடையதாகும். ஒரு பழம் 10 கிலோ முதல் 80 கிலோ எடை வரை இருக்கும்.

கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயல் கடலூர் மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. அதில் பண்ருட்டி பகுதியில் பெரும்பாலான பலா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன. 200 ஆண்டுகள் பழைமையான இந்த பலா மரமும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்த இலைகளை இழந்து, மொட்டையாகக் காட்சி அளித்தது. வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி அந்த மரத்தை பராமரித்தேன். ஆனால், தானே புயலுக்கு பிறகு மூன்று ஆண்டுகள் அந்த மரம் காய்க்கவில்லை.

அதன் பிறகு மீண்டும் ஆண்டு தோறும் அந்த மரம் காய்க்கத் தொடங்கியது. இந்த ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஞ்சுகள் விட்டது. அதில் 350 பிஞ்சுகளை மட்டும் விட்டோம். மற்றவற்றை துண்டித்து விட்டோம். இதுவரை 350 பழங்களை அறுவடை செய்துள்ளோம் என்றார். ஆண்டுதோறும் ஆயிரம் பிஞ்சுகளை விடும் என்பதால் இது, ‘ஆயிரம் காய்ச்சி மரம்’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த ஒற்றை மரத்தில் காய்க்கும் பலா ஆண்டும் தோறும் வருமானத்தை கொடுகின்றது” என்றார் இவர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT