வெல்லம், சர்க்கரை போன்றவற்றை சிறிதளவு கூட்டுப் பொரியலில் சேர்க்கும்பொழுது அது சுவையை கூட்டும். அதேபோல் வெல்லத்தை சேர்க்கும்போது இரும்பு சத்தும் தானாக கிடைத்துவிடும். அது போல் சுவை கூட்டும் பதார்த்தங்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்!
வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.
பட்டாணி சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
நெய் எவ்வளவு நாளானாலும் ஃபிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு சிறிய கட்டி வெல்லத்தைப் போட்டு வைக்கவும்.
அரிசி உப்புமா செய்யும் பொழுது அதில் சிறிதளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.
பாகற்காய் சமைக்கும் பொழுது அதில் சிறிதளவு வெல்லத்தை துருவி போட்டால் கசப்பு தெரியாது.
பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
புளி ரசத்தில் சிறிதளவு வெல்லம் போட்டால் ரசத்தின் சுவை கூடும்.
பரங்கிக்காய் பொரியல் செய்யும் பொழுது அதில் சிறிதளவு வெல்ல துருவலை போட்டால் சுவை அசத்தலாக இருக்கும்.
புளியோதரை, எள்ளோதரை போன்றவற்றை செய்யும் பொழுது அந்தத் தொக்கில் சிறிதளவு வெல்லம் கலந்தால் சாப்பாடு வெகு ஜோராக இருக்கும்.
புளித்த தோசை மாவில் சிறிதளவு வெல்லத்தை சேர்த்தால் புளிப்பின் சுவை மாறிவிடும். நெஞ்சு கரிப்பு ஏற்படாது.
டிகாஷன் இருந்து விட்டால் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு வைத்தால் மறுநாள் புது டிக்காஷன் போல் இருக்கும்.
பால் திரிந்து விட்டால் வடிகட்டி சர்க்கரை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி மிக்ஸியில் போட்டு அரைத்தால் உதிர் உதிராக ஆகிவிடும் எளிதில் பால்கோவா தயார்.
வற்றல் குழம்பு கொதித்த பின்னர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.