ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக சாம்பார் பொடி அரைப்பார்கள். அதனால் அளவு வேறுபட்டிருக்கும். ஆனாலும் அது ருசிக்கும். இந்த முறையில் சாம்பார் பொடி அரைத்தால் அனைத்து குழம்பிற்கும் பயன்படுத்தலாம். சுவையும் நன்றாகவே இருக்கும். அதன் அளவு முறைகள் இதோ:-
தேவையான பொருட்கள்:
மஞ்சள் -நூறு கிராம்
கொத்தமல்லி- இரண்டு கிலோ
குண்டு மிளகாய்-2கிலோ
மிளகு- 200 கிராம்
சீரகம் -200 கிராம்
வெந்தயம் -200 கிராம்
துவரம் பருப்பு -200 கிராம்
கடலைப்பருப்பு -200 கிராம்
உளுத்தம் பருப்பு -200 கிராம்
கல்லுப்பு- கைப்பிடி
கருவேப்பிலை- இரண்டு கைப்பிடி அளவு
கட்டி பெருங்காயம் -50 கிராம்
செய்முறை:
கட்டிப் பெருங்காயத்தை இரண்டாக்கி எண்ணையில் பொரித்து எடுத்து வைக்கவும். மேற்கூறிய அனைத்து சாமான்களையும் நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து வாணலியில் வறுத்து பெருங்காயத்தையும் அதனுடன் சேர்த்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாய், மல்லியை வெயிலில் நன்றாக காயவைத்துக் கொண்டு, இதர சாமான்களை மாத்திரம் வறுத்துப் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் உப்பு சேர்ப்பதால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். குண்டு மிளகாய் பிடிக்காதவர்கள் நீள மிளகாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு : மிளகாயை அளவுக்கு அதிகமாக காய வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் மெஷினில் அரைத்துக் கொடுப்பவர்கள். அப்படி காய வைப்பதால், அரைக்கும் எங்களின் நாசிக்கு தொந்தரவாக இருக்கிறது. அதை சாதாரணமாக காய வைத்தாலே போதும். மிஷனில் உள்ள சூட்டிலேயே அது நன்றாக காய்ந்து அரை பட்டுவிடும் என்று கூறுகிறார்கள். ஆதலால் அந்தந்த ஏரியாவில் உள்ள மெஷின்களில் அரைப்பவர்கள் அவர்கள் கூறும் குறிப்புகளை பின்பற்றவும்.
முருங்கைக் கீரை பொடி செய்யும் விதத்தைப் பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தியது- 3 கைப்பிடி அளவு
துவரம் பருப்பு ,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா- அரைகப், பாசிப்பயிறு- கால் கப்
சீரகம், மல்லி விதை தலா- ஒரு கைப்பிடி அளவு
கட்டி பெருங்காயம் -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
புளியங்கொட்டை அளவு உள்ள கட்டி பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்து விடவும். பருப்பு வகைகளை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். சீரகம், மல்லியையும் வறுக்கவும். இவற்றுடன் சுத்தம் செய்த முருங்கை கீரை மற்றும் உப்பை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட ருசி அள்ளும். இட்லி, தோசைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் நன்றாக இருக்கும். இந்தப் பொடி இரும்புச் சத்து குறைபாட்டை நீக்கும்.