மாங்காய் சீசன் வந்தாச்சு. வெயில் காலத்துக்கு ஏத்த சுவையான மாங்காய் குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்களேன். மாங்காயில் வைட்டமின் "சி" சத்து இருப்பதால் புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் மாலைக்கண் நோய், பற்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும்.
தேவையான பொருட்கள்:
மாங்காய் _1
காயத்தூள்_1/2 கரண்டி
மிளகாய்_2
உப்பு_தேவைக்கு
அரைக்க
தேங்காய் துருவல்_1கப்
நல்ல மிளகு_1/2 கரண்டி
சீரகம் 1/2 கரண்டி
மிளகாய் தூள்_1கரண்டி
மல்லித்தூள்_1/2 கரண்டி
மஞ்சள் தூள் 1/4 கரண்டி
பூண்டு_2 பல்
கறிவேப்பிலை_1 கொத்து
சின்ன வெங்காயம்_3
தாளிக்க
தேங்காய் எண்ணெய்_2 ஸ்பூண்
கடுகு, உளுத்தம்பருப்பு தலா_1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை_1கொத்து
வற்றல்_1
செய்முறை:
முதலில் மாங்காய் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த
பொருட்களை போட்டு தாளித்து பின் மாங்காய் துண்டுகளை போட்டு வதக்கி அத்துடன் காயப்பொடி, இரண்டாய் வெட்டிய மிளகாய், உப்பு போட்டு வதக்கி அத்துடன் 1கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
பின்னர் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும். மாங்காய் வெந்ததும் அரைத்த மசாலாவை போட்டு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். மணத்துடனும் சுவையுடனும் கூடிய மாங்காய் குழம்பை சுடு சோற்றுடன் ஊற்றி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
தொட்டுக்க முருங்கைக்காய் தீயல்...
முருங்கை காய் குறைவான விலையில் கிடைக்கும் சத்து நிறைந்த காய் ஆகும். வாரத்தில் 2முறையாவது முருங்கைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். மேலும் தொண்டை கரகரப்பு, சளி, மற்றும் தொண்டைப்புண் ஆகியவற்றை சரி செய்வதில் வல்லது. முருங்கைக்காய் தீயல்.
தேவையான பொருட்கள்:
முற்றாத முருங்கைக்காய்_2
பெரிய வெங்காயம்_1
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
புளி தண்ணீர்_1/4 கப்
உப்பு தேவைக்கு
வறுத்து அரைக்க
தேங்காய் துருவல் _1கப்
நல்ல மிளகு_ 1ஸ்பூன்
பூண்டு_3 பற்கள்
வத்தல் தூள்_1ஸ்பூன்
மல்லித்தூள்_1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை_2 கொத்து
வெந்தயம்_1/4 ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய்_2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு தலா1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை_1கொத்து
செய்முறை:
முதலில் முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டி இரண்டாக கீறி கொள்ளவும். வெங்காயத்தை நைசாக நீள் வாக்கில் வெட்டி கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கியதும் முருங்கைக் காயை போட்டு வதக்கி, புளி தண்ணீரை ஊற்றி வேக விடவும். அரைக்க கொடுத்த பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும்.
முருங்கைக்காய் வெந்ததும் மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து வைத்த மசாலாவையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி சிறு தீயில் வேக விடவும். மசாலா சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் தீயை அணைத்து விடலாம். நாவிற்கு ருசி ஊட்டும் முருங்கைக்காய் தீயலை ஒரு முறை வைத்து சாப்பிட்டால் பலமுறை வைக்க தூண்டும்.