மாதுளையைப் பயன்படுத்தி இதுவரை ஜூஸ் தயாரித்து குடித்திருப்பீர்கள். ஆனால் இதைப் பயன்படுத்தி சுவையான சத்து மிகுந்த அல்வா செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையிலேயே இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். மாதுளையைப் பயன்படுத்தி ஏதேனும் வித்தியாசமாக செய்ய விரும்பினால் இந்த அல்வாவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். சரி வாருங்கள், இந்த பதிவில் மாதுளை அல்வா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
4 கப் மாதுளை முத்துக்கள்
1 கப் சர்க்கரை
1 கப் நெய்
1 கப் ரவை
½ ஸ்பூன் ஏலக்காய் தூள்
¼ கப் நட்ஸ்
செய்முறை:
முதலில் மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் விதைகளை வடிகட்டி ஜூசை மற்றும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும், ரவையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். ரவை கருகிவிடாமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கவும்.
ரவை நன்கு வறுபட்டதும் மாதுளை ஜூசை அதில் சேர்த்துக் கிளறவும். பின்னர் படிப்படியாக சர்க்கரை சேர்த்த பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து தொடர்ந்து கிளறவும். குறைந்த வெப்பத்தில், இந்த கலவை அல்வா பதத்திற்கு வரும் வரை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கிளறவும்.
அல்வா பதம் வந்ததும், தீயை அணைத்து கொஞ்ச நேரம் ஆறவிடுங்கள். அல்வாவை பரிமாறுவதற்கு முன் நறுக்கிய நட்ஸை மேலே தூவி அலங்கரிக்கவும்.
இப்போது சுவையான மாதுளை அல்வாவை அப்படியே எடுத்து சாப்பிட்டால் வேற லெவல் சுவையில் இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். மாதுளை அல்வா ருசியாக இருக்கும் என்பதையும் தாண்டி, அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே இன்றே இந்த ரெசிபியை முயற்சித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.