If someone else has a problem, don't walk away!
If someone else has a problem, don't walk away! https://tamil.lifie.lk
வீடு / குடும்பம்

அடுத்தவருக்கு பிரச்னை என்றால் ஒதுங்கிச் செல்லாதீர்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

மக்கு பிரச்னை வந்தால் மட்டும் அடுத்தவர் அந்தப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், நமக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் நமக்கு ஏன் வம்பு என்று நாம் ஒதுங்கிச் செல்கிறோம். அப்படி இருக்கக் கூடாது. மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் அதையும் நாம் தீர்த்து வைக்க முயல வேண்டும். அதற்கு சின்ன உதாரணம்தான் இந்த நீதிக்கதை.

ஒரு வீட்டில் எலி ஒன்று தனது இரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும்!’ என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வீட்டில் இருந்த கோழியிடம் சொன்னது, ‘பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது’ என்று. அதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது, ‘உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை’ என்று.

உடனே எலி பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று அதே விஷயத்தை சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு, ‘நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்’ என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அது மட்டுமல்ல, ஆடு அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை, ‘எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?’ என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம். எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியை கையில் தூக்கினாள். உடனே, ‘ஆ’ எனக் கத்தினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்ஷன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி, ‘பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது’ என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. உடனுக்குடன் கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. எஜமானியை நலம் விசாரிக்க உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட பண்ணையார் ஊருக்கே விருந்து வைத்தார். இது ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார் பண்ணையார்.

எலி பொறியிலிருந்து எலி தப்பித்து விட்டது. ஆனால், எலியிடம் எகத்தாளமாகப் பேசிய அனைத்தும் உயிர் விட்டது. அதேபோல், மற்றவர் பிரச்னையைக் கண்டு எனக்கென்ன போச்சு என்று ஒதுங்கிச் செல்லாதீர்கள்.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

SCROLL FOR NEXT