Is beauty in the mind? On the face?
Is beauty in the mind? On the face? 
வீடு / குடும்பம்

அழகு என்பது அகம் சார்ந்ததா? முகம் சார்ந்ததா?

பொ.பாலாஜிகணேஷ்

முகத்தோற்றத்தைப் பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை. அவமானங்கள் எய்துபவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக்கொள்பவர்கள்தான் அழகில் வெற்றியாளர்கள்.

அழகு என்பது புறம் சார்ந்ததா? அகம் சார்ந்ததா? என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள், ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள். நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்கப் பயிற்சி செய்தால் நலமாக இருக்கும். ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. அந்தக் குருவி பல வண்ணத்தில் மிகவும் அழகாக இருந்தது. தான் மட்டுமே அழகு என எப்போதும் அது பெருமையாகச் சொல்லிக்கொண்டு இருக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் கூட அழகைப் பார்த்தே அது முடிவு எடுக்கும் அந்தக் குருவி.

ஒரு நாள் காகம் ஒன்று வந்து அந்தக் குருவியிடம், ‘நாம் நண்பர்களாக இருக்கலாமா?’ எனக் கேட்டது. அதற்கு அந்தக் குருவி, ‘நான் எப்படி அழகாக இருக்கிறேன். உன்னை நீயே கண்ணடியில் போய் பார்’ என்று திட்டி அந்தக் காகத்தை விரட்டி விட்டது.

அந்தக் காகம் மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப்போனது. சில மாதங்களுக்குப் பிறகு அந்தக் குருவிக்கு உடம்பு சரியில்லாமல்போனது. அந்தக் குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது.

இதைக் கேள்விப்பட்ட காகம் பதற்றம் அடைந்து, மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்குக் கொடுத்தது. அது மட்டும் அல்லாமல், அருகிலேயே இருந்து அந்தக் குருவியை நன்றாகப் பார்த்துக் கொண்டது.

சில நாட்களுக்குப் பிறகு அந்தக் குருவி குணமடைந்தது. அந்தக் காகத்தைப் பார்த்து, ‘எனக்குத் துன்பம் வந்தபோது எனது நண்பர்கள் யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை. ஆனால், நீயோ என்னை காப்பாற்றி விட்டாய். உலகிலேயே நீதான் அழகானவன். இனிமேல் நீதான் என் உயிர் நண்பன்’ என்றது.

யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து அசிங்கப்படுத்தக் கூடாது என்பதை உணர்த்தத்தான் இந்தக் கதை. புறத்தோற்ற அழகு அழியக் கூடியது. ஆனால், அகத்தின் அழகோ அழியாதது, என்றும் நிலையானது. ஏனென்றால், அக அழகு என்பது அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நாணயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அதுதான் உண்மையான அழகு.

அது எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால்தான் மற்ற எல்லா வார்த்தைகளை விடவும் அழகு என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே நல்ல உணர்வைக் கொடுக்கிறது. வெளித்தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணிக் கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள். ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு. இதை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களிடம் கூறுங்கள். அவர்கள் வாழ்வு சிறக்கும்.

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

க்ளூடாமைன் அதிகமுள்ள உணவுகள் தெரியுமா?

SCROLL FOR NEXT