motivation article Image credit - pixabay
Motivation

பிள்ளைகளை ஒரு தம்ளர் கூட எடுக்க விடாத பெற்றோரா நீங்கள்?

சேலம் சுபா

"என் பிள்ளையை தம்ளர் கூட எடுக்க விடமாட்டேன். அவனுக்கு நான்தான் எல்லாமே. நான் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது" என்று பெருமையுடன் சொல்லும் தாய்மார்களை பார்த்திருக்கிறோம் அதிலும் தற்போது வீட்டுக்கு ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் பெற்றோர் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சேவகம் செய்யவும் தயாராக உள்ளனர். அந்த குழந்தை கேட்பது உடனே கைகளில் கிடைத்து விடுகிறது. காரணம் கேட்டால் எங்கள் குழந்தை எதற்கும் கஷ்டப்படக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள். இது சரியான போக்கா என்றால் நிச்சயம் இல்லை.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய மானுடர் களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான Harvard Grant Study எனும் ஆய்வில், குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும், இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என செய்தி ஒன்று கூறுகிறது.

மேலும் படிப்பு, கற்றல், போட்டித் தேர்வு, தரவரிசை, மதிப்பெண், மதிப்பீடு, பல்வேறு கலை கற்றல் இவை அனைத்திற்கும் தேவைப்படும் ஆக்கமும், ஊக்கமும், மன தைரியமும், நம்பிக்கை தூண்டலும், வெற்றி, தோல்விகளைப் பகுத்தறியும் பக்குவமும், உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும்,
நிச்சயமாக வீட்டின் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு.

பெற்றோரின் எல்லை மீறிய அன்பும், தெட்ட தெற்கெல்லாம் சூப்பர் எனும் பாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நல்லது அல்ல. சுற்றி அன்றாடம் நிகழும் சிறு சிறு விஷயத்தை கவனமாகக் கையாண்டு, எளிமையாகச் செய்து முடிக்கும் பழக்க வழக்கம் ஆரோக்கியமான எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாட பணிகளில் அவர்களை ஈடுபடுத்தி  யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள உதவி செய்வது பெற்றோர் கடமை.

உதாரணமாக தினமும் பள்ளி செல்லும் குழந்தை களானால் ஒரு வயதுக்கு பின் தண்ணீர் பாட்டிலை அவர்களையே நிரப்பச் செய்யுங்கள், அவர்களின் உணவுத் தட்டை  அவர்களே எடுத்து வந்து உணவு எடுத்து தானாக உண்ணச் செய்யுங்கள். குறிப்பாக கீழே சிந்தாமல் உணவு உண்ண உதவுங்கள். தலை சீவுவது, சீருடை அணிவது காலணி அணிவது, அதற்கான பாலிஷ் போடுவது என்று பள்ளி செல்லும் முன் உள்ள அவர்களது வேலைகளை அவர்களே செய்து பழக ஊக்கம் தாருங்கள்.

சற்று பெரிய பிள்ளைகளை விடுமுறை நாட்களில் வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்தல், வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல், சமையலுக்குக் காய்கறி கழுவுதல், குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தல், சமையலறைப் பொருட்களை அடுக்குதல், என சின்னச் சின்ன வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இவற்றுக்காக சிறிய சன்மானத்தினை  வாராவாரம்  வழங்குங்கள், இது அவர்களை மேலும் ஊக்குவிக்கும். பணத்தின் அருமையையும் சேமிப்பின் அவசியத்தையும் உழைப்பின் பெருமையையும் உணர வைக்கும்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் பிள்ளைகளை நெருங்க விடுங்கள். அவர்களிடமிருந்து.  வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கற்றுக் கொள்வார்கள். ஒழுக்கத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெறுவார்கள். வீட்டுக்கொரு முதியவர் இருந்தால் பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து வளருவார்கள்.

அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்தி வைக்காமல் பெற்றோரின் முறையான வழிகாட்டுதலும், அரவணைப்பும் இருந்தாலே பிள்ளைகளின் எதிர்கால வெற்றி நிச்சயம்.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT