வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை எப்போதுமே மறக்கக்கூடாது. அந்த குணமே நம்மை பணிவான நல்ல மனிதராக வைத்திருக்க உதவும். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு உணவகத்தில் பில்கேட்ஸ் சாப்பிட்டு விட்டு டிப்ஸாக 5 டாலர்கள் கொடுத்தார். இதைப் பார்த்த வெயிட்டரின் முகம் சிறிது மாறியது. அதை கவனித்த பில்கேட்ஸ் என்னவென்று கேட்டார். நேற்று உங்கள் மகள் இந்த உணவகத்திற்கு வந்திருந்தார். அவருக்கும் நான்தான் உணவுகளைப் பரிமாறினேன். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு எனக்கு டிப்ஸாக 500 டாலர்கள் கொடுத்தார்.
உலகின் மிகபெரிய பணக்காரரான அவருடைய தந்தை நீங்கள் எனக்கு வெறும் 5 டாலர்கள் மட்டுமே டிப்ஸாக தருகிறீர்களே? என்று கேட்டாள். அவள் உலகில் பெரிய பணக்காரரின் மகள். ஆனால், நானோ விறகு வெட்டுபவரின் மகன் என்று கூறினார் பில் கேட்ஸ்.
‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்தில் நாகேஷ் பெரிய ஆளான பிறகும் அவர் உணவகத்தில் வேலை செய்தபோது போட்டிருந்த யூனிபார்மை தன் வீட்டின் ஹாலில் எல்லோருக்கும் தெரியுமாறு மாட்டி வைத்திருப்பார். அவர் வீட்டிற்கு வந்த ஒருவர், ‘ இப்போதுதான் பெரிய ஆளாக ஆகிவிட்டீர்களே! இன்னும் அதை ஏன் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். அந்த அழுக்கு யூனிபார்மை தூக்கிப் போட்டுவிட வேண்டியது தானே?’ என்று கேட்பார்.
அதற்கு நாகேஷ் கூறுவார், ‘தான் என்ற அகங்காரம் வந்து பணத்திமிர் எனக்குள் எட்டிப்பார்க்கும் போது, சில நேரங்களில் இந்த அழுக்கு யூனிபார்மையா நாம் ஒவ்வளவு நாளாகப் போட்டிருந்தோம்? என்று கேவலமாக பார்ப்பதுண்டு. அப்போது அது என்னிடம் சொல்லும், ‘என்னை போட்டப்பிறகு தான் நீ இந்த கோட் சூட்டையெல்லாம் போட்டிருக்கிறாய்! என்று ஏளனமாக சிரிப்பதுப்போல தோன்றும். என்றைக்குமே பழசை மறக்கக்கூடாது என்பதை அது எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும்’ என்று சொல்வார்.
இந்த இரண்டு கதைகளில் சொன்னதுப் போலத்தான். நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், ஏறிவந்த பாதையை மறக்கக்கூடாது. அதுவே நம்மை பண்பானவராகவும், பணிவானவராகவும் வைத்துக்கொள்ளும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.