இளமை பருவம் என்றாலே கெத்துதான். அதில்தான் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி மற்றும் நல்லவர் யார், தீயவர் யார் என்று அனைத்திற்கும் புரிதலோடு சேர்ந்த ஓர் அனுபவம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சிலவற்றை அலசிவிடுவோம் வாருங்கள்.
ஆற்றல் கலந்த புதுமை:
பொதுவாக இளைஞர்கள் தங்கள் சிறு வயதில் நல்லதைக் கற்றாலும் தங்களுக்கென்று ஒரு சுய அறிவு வந்தவுடன் எதிலும் ஒரு புதுமையை எதிர்பார்ப்பார்கள். அப்படி ஆசைப்படும் அவர்களுக்குக் கட்சிதமான நல்ல ஆற்றலும் இருக்கும். ஆகையால் அவர்கள் தன்னையும் சேர்த்து இந்தச் சமுதாயத்தையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வார்கள். இதனால் நம்முடன் இருக்கும் நம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் மிகப்பெரிய பயனடைவார்கள்.
மாற்றத்திற்கான முகவர்கள்:
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சொல்லைச் செயலாக்குவதில் இவர்களின் பங்கு முக்கியமாக பார்க்கப்படும். இப்படி ஒன்றை ரெண்டு ஆக்குவது மற்றும் ஐந்தை பத்தாக்குவது என்று எல்லா துறையிலும் மாற்றத்தைப் பார்க்க முடியும். சுய மாற்றத்தில் தொடங்கி, குடும்பம், சமுதாயம், தேசம், உலகம் என்று படிப்படியாக நல்ல, உயர்ந்த மாற்றங்கைள ஏற்படுத்தி அவற்றை பரவச் செய்யும் முகவர்களாக இருப்பதில் இளைஞர்களுக்கு பெரும்பங்கு உண்டு.
பொருளாதார வளர்ச்சியின் தூண்கள்:
இளைஞர்களின் மிகப்பெரிய பங்கு ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள் கற்கும் சில விஷயங்களில் நிறைய புதுமை திட்டங்களைப் புகுத்தி அதில் சில அறிவியல் தொழில்நுட்பங்களையும் சேர்த்து தங்கள் ஆளுமைத் திறனையும் சேர்த்து வளர்த்துக்கொள்வார்கள். இது காலப்போக்கில் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும் சேர்த்து ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரியதாக எதிரொலிக்கும்.
சமூக உறவை மேம்படுத்துதல்:
இந்தக் காலகட்டத்தில்தான் உறவு என்றால் என்ன என்ற புரிதல் உணர தொடங்கும். அது தங்கள் சொந்த பந்தம் உறவானாலும் சரி, கணவன் மனைவி உறவானாலும் சரி, பணியிடத்து உறவானாலும் சரி, இல்லை பிற நாட்டினருடன் ஏற்படும் உறவாக இருந்தாலும் சரி ஆக மொத்தம் இந்த சமூகம் அடுத்த படிக்கட்டு ஏற ஓர் ஊன்றுகோலாக இது அமைகிறது. இதனால் நல்ல புரிதல்கள் இந்த மனித சமுதாயத்தில் உருவாக்கப்படும். அதேநேரம் இப்போது வெடிக்கும் சில உறவுமுறை சர்ச்சைகள்போல பலவிதமான மாற்றங்களும் வரலாம். அதையும் நாம் கடந்துவிட வேண்டியதான்.
என்னதான் இன்றைய இளைஞர்கள் பலர் சமுதாயத்தில் ஆடாவடிகள் செய்துகொண்டிருந்தாலும் ஒரு தரப்பு இளைஞர்கள் மேலே குறிப்பிட்டதுபோல பல நன்மைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறதோ அங்குதான் செயல்திறன் கலந்த சுட்டித்தனங்களும் அடங்கியிருக்கும்.
இப்படி ஒரு புரிதல்கள் எல்லா மனிதருக்கும் இருந்தாலே அனைவரும் ஒன்றுபட்டு சந்தோஷமாய் இந்தப் பூவுலகில் வாழ முடியும். இல்லை என்றால் ஒருவரை ஒருவர் குறை சொல்லிவிட்டு காலத்தை நகர்த்த வேண்டும். ஆகையால் ‘எது சரியென்று நீங்களே முடிவெடுங்கள் நண்பர்களே.’