Nanthi malai Temple https://kdhar.wordpress.com
ஆன்மிகம்

நந்தி மலையை பற்றி தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

‘நந்தி துர்கா’ என்று அழைக்கப்படும் நந்தி மலை பெங்களூரு நகரத்தில் மிகவும் பிரபலமான இடமாகும். வடக்கு பாலாறு தென்பெண்ணாறு சித்திராவதி அர்காவதி மற்றும் பாப்கினி ஆகிய ஆறுகள் இந்த நந்தி மலையில் பிறக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து 4750 அடி உயரத்தில் அமைந்துள்ள நந்தி மலையின் காற்று மற்றும் அமைதியான சுற்றுப்புறங்கள் ஆங்கிலேயர்களுக்கும் திப்பு சுல்தானுக்கும் கோடை கால ஓய்வை வழங்கியது. இம்மலைகளின் வானிலை ஆண்டு முழுவதும் இதமாக இருக்கும். நந்தி மலையிலிருந்து பார்க்கக்கூடிய முக்கிய இடங்கள் வடமேற்கு சன்னகேசவ பெட்டா (4762 அடி), தென்மேற்கு பிரம்மகிரி (4657 அடி) வடக்கு ஸ்கந்தகிரி (4749 அடி) தெற்கே செங்குக்தான சரிவு மற்றும் கீழே உள்ள கிணறு சிரவண தீர்த்தம்.

இங்குள்ள கோட்டை சுவர்கள் சிக்க பல்லாபுர பாலேயர்களால் கட்டப்பட்டதாகவும் பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரால் பலப்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. சில காலம் மராத்தியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. தென்மேற்கில் உள்ள பள்ளத்தாக்குக்கு, ‘திப்பு சுல்தானின் துளி’ என்று பெயர். இங்குள்ள குளத்திற்கு, ‘அம்ரித் சரோவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கான இரண்டு பழைமையான கோயில்கள் இந்த மலையில் அமைந்துள்ளன. நந்தி மலையின் உச்சியில் உள்ள யோகானந்தீஸ்வரர் கோயில் சோழர் கால கட்டடக்கலையைக் கொண்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறை நுழைவாயிலில் அலங்கார பித்தளைக் கதவுகள் மற்றும் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். துவாரபாலகர்கள் உருவங்கள் விஜயநகர ஆட்சியாளர் கிருஷ்ணதேவராயன் பரிசு என்று கூறப்படுகிறது. நந்தி மலைக்கு அருகில் உள்ள நந்தி கிராமத்தில் யோகநந்தீஸ்வரர் கோயில் உள்ளது.

அசல் கோயில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. பின்னர் சோழர் மற்றும் விஜயநகர காலங்களில் இது சேர்க்கப்பட்டது. இந்த யோகநந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரே நேர்கோட்டில் தனித்தனி நந்தி மண்டபங்களுடன் இரண்டு தனித்தனி கருவறைகள் உள்ளன. இந்த நந்தி மண்டபங்களில் ஒரு சிறிய கர்ப்ப கிரகமும் உள்ளது. வடக்கே உள்ள கோயில் யோகநந்தீஸ்வரருக்கும் தெற்கே அருணாச்சலேஸ்வரர் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள நேர்த்தியான கல் விளிம்புகள் அலங்கரிக்கப்பட்ட வேலைப்பாடு மற்றும் கலைத்திறனை காட்டுகின்றன. நந்தி மலையின் உச்சியில் சூரிய உதயம் மனதைக் கவரும் காட்சியை ரசிக்க சூரிய உதய நேரத்திற்கு முன்பே செல்ல வேண்டும்.

பெங்களூருவில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நந்தி மலை.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT