தீபம்

ராகு, கேது தோஷ நிவர்த்தி தரும் ஜீவசமாதி!

ஏ.அசோக்ராஜா

முஞ்சிகேசர் என்ற பெயர் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சென்னை, ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகே இருக்கும் ஸ்ரீ கச்சாலீஸ்வரர் எனும் பழைமையான கோயிலில் முஞ்சிகேச முனிவருக்கு சன்னிதி உள்ளது. அதேபோல், தமிழகத்தில் சுமார் பத்திலிருந்து பதினைந்து பழைமையான சிவன் கோயில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சன்னிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையான திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோயில் அருகே இவரது ஜீவசமாதி தனிக் கோயிலாக அமைந்துள்ளது.

சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒரு நாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்க, சிவனின் சாபத்தைப் பெறுகிறது. தனது தவறை உணர்ந்து வருந்தி திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க, “சாபத்துக்கு பிராயச்சித்தமாக நீ பூலோகம் சென்று பல சிவ க்ஷேத்ரங்களை வழிபட வேண்டும். அவ்வாறு சிவ க்ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கித் தவமிருக்கும் சுனந்த முனிவர் என்பவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரது ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உனது சாபம் நீங்கும். அந்த நொடியில் நான் அங்கு தோன்றுவேன்” என்று சிவபெருமான் சொல்ல, அதன்படி கார்கோடகன் ஒரு முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ க்ஷேத்ரங்களை வழிபடுகிறார்.

கார்கோடகன் வழிபட்ட இடம்தான், ‘கோடன்பாக்கம்’ ஆகி, அதுவே பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி என்று ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீ வேங்கீஸ்வரம் கோயில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட மிகப் பழைமையான கோயில். நிறைவாக, திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அவனது சாபமும் நீங்கியது.

சுனந்த முனிவர் சரி, இந்த முஞ்சிகேச முனிவர் என்பவர் யார்? சுனந்த முனிவர் கடுந்தவம் புரிய, அதனால் அவரது தலை மீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து வளர்ந்தது. இதன் காரணமாகத்தான் அவர், ‘முஞ்சிகேசர்’ எனப் பெயர் பெற்றார். கேசம் என்றால் முடி. 20ம் நூற்றாண்டில் கூட ரமண மகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவுக்குத் தவம் செய்து ஈசனின் தரிசனத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

சிவனுக்கும், காளிக்கும் நடைபெற்ற தாண்டவப் போட்டியை நேரடியாகக் கண்டவர் முஞ்சிகேச முனிவர். மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தபொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்? இவர் திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாலங்காடு. ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாகக் கொடுத்து சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்ய, நிச்சயம் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். இந்த ஜீவசமாதி சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியப்படுகிறது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT