தீபம்

சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்!

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ‘உங்கள் உள்ளத்தின் உந்து சக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன்’ என்கிறார் சிறுவாபுரி முருகன்.

ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக, சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

சென்னை-கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோ மீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோ மீட்டர் தொலைவு சென்றால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.

சென்னையிலிருந்து செங்குன்றம்-காரனோடை வழியாகவும், மீஞ்சூர்-பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இந்த ஊர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவ குசனுக்கும் போர் நடைபெற்ற இடம் என்றும் இது கூறப்படுகிறது.

பசுமை கட்டி நிற்கும் நெல் வயல்களைக் கடந்து சென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில். கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்தத் திருத்தலம் குறித்துப் பாடியுள்ளார். மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பாலசுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வ மூர்த்தங்களும் மரகதப் பச்சைக் கல்லால் ஆனவை. இதைப்போல் வேறெங்கும் காண முடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

நிலம், வீடு, மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவது நிதர்சனமான உண்மை.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT