groundhog day 
கல்கி

மிருகங்களால் பருவ மாற்றத்தை உணர முடியுமா?

கே.என்.சுவாமிநாதன்

குளிர் காலம் எப்போது முடியும், வசந்தம் எப்போது வரும் என்று மிருகங்களால் உணர முடியும் என்ற நம்பிக்கை, பண்டைய நாட்களில், சில மேலை நாடுகளில் இருந்தது.

கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் பல நாடுகளில் குளிர் காலம் கடுமையாக இருக்கும். வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே சென்று உடலை வதைப்பதுண்டு. அடிக்கடி பனி மழை பெய்வதுண்டு. இலைகளை உதிர்த்த மரங்கள் பனிப் போர்வை போர்த்திக் கொண்டு வெண்மையாகக் காட்சியளிக்கும். வாட்டும் குளிர் காலம் முடிந்து வசந்தகாலம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கும்.

நிலப்பன்றி, கரடி, பேட்ஜர், அணில் போன்ற விலங்குகள் பனிக்காலத்தில் உறக்க நிலைக்குப் போய்விடும். அதாவது பனிக்காலங்களில் இந்த விலங்குகள் உண்பதில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்.

பனிக்காலத்தின் நடுவில், அதாவது பிப்ரவரி இரண்டாம் தேதி நிலப்பன்றி தன்னுடைய வளையிலிருந்து வெளிவரும். அப்போது வருகின்ற நிலப்பன்றி தன்னுடைய நிழலைப் பார்த்தால், குளிர்காலம் இப்போது முடிவடையாது, இன்னும் ஆறு வாரங்கள் தொடரும் என்று அர்த்தம். நிலப்பன்றி தன்னுடைய நிழலைப் பார்க்கவில்லை என்றால் வசந்தகாலம் சீக்கிரமே வந்து விடும் என்று கூறுவார்கள்.

மேலை நாடுகளில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியை க்ரௌண்ட்ஹாக் டே (groundhog day) அதாவது, நிலப்பன்றி நாள் என்று கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் நிலப்பன்றியை கவனித்தால் குளிர் காலம் முடிந்து வசந்தம் சீக்கிரம் வருமா அல்லது குளிர் காலம் நீடிக்குமா, என்று அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை இன்று நேற்றல்ல தொன்று தொட்டு வருவது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பாவில் இந்தப் பழக்கம் தோன்றியது.

க்ரௌண்ட்ஹாக் டே

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்கள் இந்த நம்பிக்கையையும் எடுத்துச் சென்றார்கள். 1886 ஆம் ஆண்டு க்ளைமர்வரியாஸ் என்ற நபர் அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரத்துச் செய்தித்தாளில் பிப்ரவரி இரண்டாம் தேதி “க்ரௌண்ட்ஹாக் டே” என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை செயற்கைக்கோள் மூலமாக துல்லியமாகக் கணிக்க முடிகின்ற இந்த காலத்திலும் “”க்ரௌண்ட்ஹாக் டே” கனடா, அமெரிக்கா நாடுகளில் பல இடங்களில் கேளிக்கை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குத் திரளான மக்கள் வருவதுடன் ஆடல், பாடல், கேளிக்கை விளையாட்டுகள், கடைகள் என்று கோலாகலமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் நிலப்பன்றியை கையில் தூக்கிக் கொண்டு வருபவர், அதைத் தன் காதருகே கொண்டு சென்று, நிலப்பன்றி அவருடைய காதில் நிழலைப் பார்த்ததா இல்லையா என்று சொல்வதைப் போல பாவனை செய்து அதனை அறிவிப்பார். இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்கின்றன. செய்திதாள்கள் முக்கியத்துவம் கொடுத்து எழுதுகின்றன.

இந்த நாள் கொண்டாடப்படுகிற நகரத்தில் நிலப்பன்றிக்கு செல்லப் பெயர் இட்டு அழைப்பதும் உண்டு. அமெரிக்காவின் பென்சில்வேனியா நிலப்பன்றி “பில்” என்ற பெயருடன் பிரபலம். மற்ற பெயர்கள் கனடா, ஒன்டாரியோ “வில்லி”, ஆல்பர்டா “பில்லி”, நோவாஸ்காடியா “சாம்”, அமெரிக்கா விஸ்கான்சின் “ஜிம்மி”, நியூயார்க் “டேவ்”, நியூயார்க் நகரம் “ச்சக்”, நார்த் கரோலினா “வால்லி”, அட்லாண்டா “லீ”.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT