Man traveling the Auto 
கல்கி

சிறுகதை: என் ஆட்டோ சவாரியும் அகிலன் அவர்களின் 'டாக்ஸி டிரைவர்' சிறுகதையும்!

சாந்தி ஜொ

விடியற்காலை 1 மணி. விமானம் புறப்பட தயாரானது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இலங்கைக்கு சென்று விடுவேன். எனது இந்த முதல் இந்திய பயணத்திற்கு காரணம் என் 4 மாத ஆண் குழந்தை அகிலன் தான். திருமணமாகி நான்கு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த எங்களுக்கு பிறந்தவர். குழந்தைக்காக வேளாங்கண்ணி மாதாவிடம் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை செலுத்த தான் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தேன். மாதா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள தேவாலயங்கள் அனைத்திற்கும் சென்று விட்டு இலங்கைக்கு திரும்புகிறேன்.  
கையில் மிச்சமிருந்த இந்தியா ரூபாயை விமான நிலையத்தில் நாணயமாற்றம் செய்தால் எனக்கு நஷ்டம் என்பதால் கொழும்பிலுள்ள நாணயமாற்று அலுவலகத்தில் மாற்றலாம் என்று நினைத்திருந்தேன். இலங்கை ரூபாய் கொஞ்சம்  மட்டுமே கையில் இருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிலுள்ள என் வீட்டிற்கு போவதற்கான பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்தே தோளில் ஒரு பேக்கையும் டிராவல் பேக்கையும் இழுத்துக் கொண்டு சென்றதில் களைப்பாகி ரோட்டில் ஒரிடத்தில் உட்கார்ந்து கொண்டேன். நான் உட்கார்ந்த ரோட்டின் நேர் எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் இருந்ததை அப்பொழுது தான் கவனித்தேன். ஒரு ஆட்டோ டிரைவர் ரோடு மாறி வந்து என்னிடம் பேசினார்.

"எங்க போகணும் சார்"

"கொழும்புக்கு பஸ் வர ஸ்டாண்டுக்கு போகணும்" என்றேன்.

"800 தாங்க சார் போகலாம்"

"வேணா நான் நடந்து போறேன்"

"சார் என்ன ஜோக் பண்றீங்களா. இந்த பெட்டிய தூக்கிட்டு அவ்வளவு தூரம் எப்படி நடந்து போவீங்க"

"இல்ல என்னா பிரச்சனைனா, இந்தியா போய்டு இப்ப தான் வரேன். எங்கிட்ட பஸ்சுக்கு போக மட்டும் தான் நம்ம நாட்டு பணம் சரியா இருக்கு. மத்ததெல்லாம் இந்தியா பணமா தான் இருக்கு" என்றேன்.

"அட போங்க சார். உங்ககிட்ட பேசிட்டு இருந்ததுக்கு வேற கஸ்டமர்கிட்ட பேசி இருந்தா இந்நேரம் அயர் கிடைச்சிருக்கும்" என்று சொல்லிவிட்டு ஆட்டோ டிரைவர் எதிர்பக்கம் அவருடைய ஸடாண்டுக்கு சென்றார்.

ஸ்டாண்டுக்கு சென்ற ஆட்டோ டிரைவர் அங்கிருந்த மற்ற ஆட்டோ டிரைவர்களிடம் என்னை கையை காண்பித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். ஸ்டாண்டிலிருந்து திரும்பவும் என்னருகில் வந்து "இந்திய பணம் நம்ம நாட்டுக்கு எவ்வளவு போகுது" என்றார்.

"இந்திய பணம் 1 ரூபாய் நம்ம நாட்டுக்கு 3.50 வரும்" என்றேன்.

ஆட்டோ டிரைவர் "சரி சார். இங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு போக 800 ஆகும். அதுக்கு ஏத்த மாதிரி இந்திய காச கொடுங்க. ஆமா எங்க போனா மாத்தலாம்"என்றார்.

"MONEY EXCHANGE OFFICEல மாத்தலாம்" என்றேன்.

ஆட்டோவில் ஏறி சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ டிரைவர் "சார் பஸ் ஸ்டாண்டுக்கு போக இந்த டைம்க்கு எப்படியும் 1000 ஆகும். டிராவல் பேக்கும் வைச்சி கூட்டிட்டு போறேன். இந்திய பணம் ஒரு 200 சேர்த்து தாங்க" என்றார் டிரைவர்.

"நீங்க ஆட்டோல ஏற முதல்ல இத சொல்லிருந்த நான் ஏறி இருக்க மாட்டேன். இப்ப இப்படி சொல்லுறீங்க" என்றேன்.

"உங்கள கூட்டிட்டு போறதே பெருசு. ஒழுங்கா 200 சேர்த்து தாங்க. இல்லனா ஏத்துன இடத்துலயே திரும்ப போய் இறக்கிறேன். வேற ஆட்டோ பிடிச்சி போங்க" என்று தகராறு செய்தார் அந்த திமிர்பிடித்த ஆட்டோ டிரைவர்.

பயணம் செய்த களைப்பும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று பிள்ளையை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததால் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட காசை கொடுக்க ஒத்துக் கொண்டேன். பஸ் ஸ்டாண்ட் வரை எதுவும் பேசாமல் இருந்தேன். இந்திய பணம் 500 ரூபாய் கொடுத்து விட்டு பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீட்ற்கு பஸ் ஏறினேன். மறுநாள் பகல் கையில் மிச்சம் இருந்த இந்திய காசை மாற்ற வேண்டி கொழும்பில் உள்ள MONEY EXCHANGE OFFICEக்கு சென்றேன்.

என்னிடம் இருந்த இந்திய 500 ரூபாய் தாள்கள் சிலவற்றை மாற்றிக்கொண்டேன். அதுமட்டுமில்லாமல் 300 ரூபாய்க்கு 10 ரூபாய் தாள்கள் 30 இருந்தது. இந்தியாவில் பஸ்சில் பயணிக்க நேரும் என்பதால் அங்கிருந்த போது 10 ரூபாய் தாள்கள் மாற்றி வைத்திருந்தேன்.

"300 ரூபாய் இருக்கு இதையும் மாத்தி தாங்க" என்று சொல்லி முகவரிடம் தாள்களை நீட்டினேன்.

"சாரி சார். இத மாத்த முடியாது. இந்திய பணம் 10 ரூபாய் தாள், 20 ரூபாய் தாள் நாங்க மாத்துறது இல்ல. 20 ரூபாய் தாள் கூட ஒண்ணு, ரெண்டு ஆபீஸ்ல மாத்துவாங்க. 10 ரூபாய் மாத்த மாட்டாங்க" என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் விடியற்காலை பயணம் செய்த ஆட்டோ டிரைவருக்கு நான் 100 ரூபாய் தாள்கள் 3ம்,  இடையில் 200 ரூபாய் கேட்டு தகராறு செய்ததால் 10 ரூபாய் தாள்கள் 20ம் கொடுத்தது எதர்ச்சையாக அப்பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. ''வேணும் அந்த ஆட்டோ டிரைவருக்கு. எங்கிட்ட 200 கூட கேட்டார் தானே இப்ப எப்படி அத மாத்துவார் என்று எனக்குள் நினைத்து கொண்டேன்.

பணத்தை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு வரும்போது குழந்தைக்கு பால்மாவு வாங்கிக் கொண்டு வரும்படி மனைவி சொன்னதால் அதை வாங்க கடைக்கு சென்றேன். நான் இந்தியா போவதற்கு 2 வாரத்திற்கு முன் 2500க்கு இருந்த பால்மாவின் விலை 3200 ஆக உயர்ந்திருந்தது. காய்கறி வாங்க மார்க்கெட் போனபோது காய்கறிகளின் விலையை பார்த்து அதிர்ச்சி ஆனேன். தலைச்சுற்றலே வந்து விட்டது.

இப்படி நாட்டில் பொருட்களின் விலையை உயர்த்தி வைத்தால் மக்கள் எப்படி அன்றாட வாழ்க்கையை எதிர் கொள்ள முடியும். ஆட்டோ டிரைவர் என்னிடம் அதிகமாக பணம் வாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் இப்படியே சென்றால் அவர் செய்தது போல தானே எல்லோரும் செய்வார்கள் என்று நினைத்து கொண்டேன். 

எழுத்தாளர் அகிலன் அவர்களின் டாக்ஸி டிரைவர் என்ற சிறுகதையில் உள்ள வரிகள் இப்படி இருக்கும் 'வயிற்றுக்குச் சோற்றுக்கே இங்கு ஆலாய்ப் பறக்க வைத்து விட்டு, எப்படி இவர்களிடம் நாம் கண்ணியத்தையும் பண்பாட்டையும் உண்மையையும் எதிர்பார்க்க முடியும்?'

வருடத்தில் இருமுறை சூரிய பகவான் வழிபடும் ஸ்ரீமுக்தீஸ்வரர்!

கிரிக்கெட்டை கருவறுத்த Baseball! 

தூய தமிழ் போயே போச்சு! எங்கும் எதிலும் 'தமிங்கிலம்' வந்தாச்சு!

நாராயணீயம் காவியம் தோன்றிய வரலாறு தெரியுமா?

ஹாரர் ஃபேனாகவே இருந்தாலும், இரவில் இந்த 5 படங்களை பார்க்காதீங்க!

SCROLL FOR NEXT