Transport Department Img Credit: Dinakaran
கல்கி

சாமான்ய மனிதனுக்கான பேருந்து வேண்டும்!

முனைவர் என். பத்ரி

பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பல மடங்கு அதிக கட்டணங்களை வசூலிப்பது, விதிகளை மீறி பேருந்துகளை இயக்குவது, அரசு உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதனால் பொதுமக்களின் பயணங்கள் பாதிக்கப்படுப்படுகின்றன.

தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதும் 1967-ல் பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கிய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிராமப்புறங்களுக்குப் பேருந்து வசதி, வேலைவாய்ப்பு, தொழிலாளருக்கு தரமான பணியிட சூழல், குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணம் செய்யும் வசதி, அரசுக்கு நிதிச்சுமை இல்லாமை என பல நன்மைகள் இத்திட்டத்தால் கிடைத்தன. அதிக வருவாயும் கிடைத்ததால், முதல் 20 ஆண்டுகளில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு கணிசமாக தொகை செலவிடும் அளவுக்கு, போக்குவரத்துத் துறை லாபம் ஈட்டியது. இந்த வருவாயைக் கொண்டு, ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு மருத்துவக் கல்லூரி, மூன்று பாலிடெக்னிக்குகள் உருவாக்கப்பட்டன.

போக்குவரத்து துறை 1997 வரை அரசிடம் இருந்து நிதி எதையும் பெறாமல், சொந்த வருமானத்தைக் கொண்டு செயல்பட்டு வந்தது. இப்போதும் கூட ஏராளமான பேருந்துகள், பணிமனை இடங்கள், அலுவலகக் கட்டிடங்கள், வழித்தடங்களில் பேருந்து இயக்கும் உரிமை என அதிக அளவிலான அரசின் சொத்து போக்குவரத்துத் துறையில் இருக்கிறது.

எரிபொருள் விலை உயர்வு, சுங்கச் சாவடிகள் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சுங்கச் சாவடி கட்டணத்தால் மட்டுமே கணிசமான கோடி ரூபாய்கள் கூடுதல் செலவாகிறது. பயன்பாட்டில் உள்ள வழித்தடங்களில் 40 சதவீதம் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. ஆனால், தமிழக அரசு எரிபொருள் மானியத்துக்கும், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகை, மகளிர்க்கான இலவச பயணம் போன்றவற்றிற்கு கட்டண மாண்யமாக பல கோடி ரூபாய் வழங்குகிறது. இதனால், போக்குவரத்துத் துறையின் நிதி நெருக்கடி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலைதொடர்ந்தால், சாமான்ய மக்களுக்கு மிகவும் தேவைப்படும் இத்துறை அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவம் போன்ற துறைகள் சாமான்ய மக்களின் அன்றாட சேவைக்கு மிகவும் தேவையானவை. எனவே மாநில அரசு போக்குவரத்து துறையில் தனியார் பங்களிப்பை குறைப்பது மாநிலத்தின் வருவாயை நிச்சயமாக அதிகரிக்கும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இத்துறைகள் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சாலைகள் அருகே இருக்கும் வாகன நிறுத்தங்களில் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை தனியாரிடம் விடாமல், போக்குவரத்து துறையே மேற்கொள்ளலாம். பெரிய அளவில் உள்ள வர்த்தக நிறுவனங்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் இருந்து பொது போக்குவரத்து மேம்பாட்டு கட்டணமாக சிறிய தொகை வசூலிக்கலாம். வளர்ந்த நாடுகளில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற புதுமையான திட்டங்களை, தமிழக போக்குவரத்து துறையில் செயல்படுத்த முனைப்புகள் எடுக்க வேண்டும். இந்நிலையில் போக்குவரத்துத் துறையின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் முடியும். சாமான்ய மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவ முடியும்.

வேண்டியதை அருளும் முருகனின் 21 நாள் விரதம்!

பட்டாசு வரலாற்று தகவல்கள்!

மாதந்தோறும் EMI தொகையை அதிகப்படுத்துவது நன்மை தருமா?

திருமண பந்தத்தின் உன்னதம் உணர்த்திய புகழ் பெற்ற சினிமா இயக்குநர் மனைவி!

2030ல் இந்தியாவே மாறப்போகுது… டேட்டா பயன்பாடு பன்மடங்கு உயரும்! 

SCROLL FOR NEXT