முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோப்படுத்தலாம். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு கை, கால், விரல்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். இதனால் கை, கால் அசைக்க முடியாமல் முடக்கிவிடும். இவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும்.
இவர்கள் வாத இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம்.
காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும்.
வாத இலையை நீரில் ஊறவைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றிவந்தால் குடைச்சல் குறையும்.
மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தக்க நிவாரணி வாதநாராயணன் கீரை. இந்த வாதநாராயணன் கீரைக் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள், பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.
மழை காலம், வெயில் காலம் என்று எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம்.
நரம்புகளை பலப்படுத்தும்.
கை, கால் முடக்கத்தை போக்கும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
முட்டி வலிக்கு சிறந்த வலி நிவாரணி, மலக்கட்டை நீக்கி, குடலை சுத்தப்படுத்தும்.
வாத நாராயண கீரை குழம்பு :
தேவையான பொருட்கள்:
வாத நாராயணன் கீரை - 1 கப்
துவரம்பருப்பு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1½ ஸ்பூன்
தனியா தூள் - 1½ ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க
கடுகு, உளுந்து, எண்ணெய்
செய்முறை:
துவரம்பருப்பை வேகவைத்து வெந்ததும் அதை நன்கு கலந்து, அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிவரும்போது கீரையை சேர்த்து சிறிது நேரம் வேகவிடவேண்டும்.
அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, அதை வெந்து கொண்டிருக்கிற கலவையில் சேர்க்க வேண்டும்.
கீரை வெந்ததும் புளி ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, சுவைக்கேற்ப சிறிது உப்பு சேர்த்து, மெல்லிய தீயில் வைத்து, நன்கு கொதித்ததும் இறக்கவும்.
மணமான, சுவையான, சத்தான கீரை சம்பார் ரெடி.