செய்திகள்

உதவி ஆய்வாளர் அடித்ததால் மனம் நொந்து தீக்குளித்த சிறைக்காவலர்!

கல்கி டெஸ்க்

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. 40 வயதாகும் இவர் சிறைக்காவலராகப் பணி புரிந்து வருகிறார். காவலர் ராஜாவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் கடந்த 2020ம் ஆண்டு சொத்து தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையில காவலர் ராஜாவின் மகனை அவரது சகோதரர்களே கொலை செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தனது மகனை இழந்த காவலர் ராஜா அன்று முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதனால் அவர் பணிக்குச் சரியாகச் செல்லாமலும், பணியில் கவனம் செலுத்த முடியாமலும் இருந்ததால் சிறைக்காவலர் பணியில் இருந்து அவர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், ‘சொத்து தகராறு காரணமாக தனது மகனை கொலை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி அவர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து இருக்கிறார். காவலர் ராஜா புகார் மனு கொடுத்த அன்று உதவி ஆய்வாளர் பொற்செழியன் என்பவர்தான் பணியில் இருந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டதில் காவலர் ராஜாவின் மீது தவறு இருந்ததால் பொற்செழியன் அவரை அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் மிகவும் அவமானம் அடைந்த ராஜா காவல் நிலையத்தின் முன்பாகவே நேற்று தீக்குளித்தார்.

அதைக்கண்டு பதறிய காவல் துறையினரும் பொதுமக்களும் உடனே அவரை மீட்டு திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இன்று காவலர் ராஜா மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து, லால்குடி உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

SCROLL FOR NEXT