Army Recruitment  
செய்திகள்

ஜூலையில் தொடங்கும் அக்னிவீர் இராணுவ ஆள்சேர்ப்புப் பேரணி!

ரா.வ.பாலகிருஷ்ணன்

இராணுவத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்காக அக்னிவீர் ஆள்சேர்ப்புப் பேரணி வருகின்ற ஜூலை முதல் வாரத்தில் திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பாக தூத்துக்குடியில் நடக்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்திய இராணுவத்தில் இளைஞர்கள் 4 வருட ஒப்பந்தத்தில் பணியாற்றும் திட்டம் தான் அக்னிபாத். இத்திட்டத்தில் பணியாற்றும் வீரர்களை அக்னிவீர் என்று அழைப்பார்கள். இத்திட்டத்தின் கீழ் 6 மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். 4 வருடங்களுக்குப் பிறகு, 25% வீரர்கள் மட்டும் அடுத்த 15 வருட ஒப்பந்தத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். குறுகிய காலத்திற்கு குறைந்த சம்பளத்தில் இளைஞர்களை முப்படைகளில் பணியமர்த்துவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வருகின்ற ஜூலை 1 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் உள்ள தருவை விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்புப் பேரணியை நடத்த உள்ளது. இந்தப் பேரணியில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அக்னிவீர் 10 ஆம் வகுப்பு டெக்னிகல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், 12 பிப்ரவரி 2024 தேதியிட்ட பேரணி அறிவிப்பின் படி www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தங்களது அணைத்து ஆவணங்களையும் பேரணி தளத்திற்கு கட்டாயமாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆள்சேர்ப்பு செயல் முறையானது முற்றிலும் தானியங்கி நடைமுறையாகும்‌. மேலும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏமாற்றுக்காரர்கள் மற்றும் மோசடி செய்பவர்களிடம் இருந்து இளைஞர்கள் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுதல் மட்டுமே தகுதிக்கு ஏற்ப அவர்களின் அக்னிவீர் தேர்வை உறுதி செய்யும். விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்களுக்கு எந்தப் பங்கும் இந்தப் பேரணியில் இல்லை மற்றும் இளைஞர்கள் அத்தகைய முகவர்கள் மற்றும் ஏஜென்சிகளால் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இராணுவத்திற்கு சரியான இளைஞர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு நடைபெறும் இந்தப் பேரணியில், தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். போகப்போக சம்பளம் உயர்த்தப்பட்டு 4வது வருடத்தில் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரிப் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. 4 வருடங்களுக்குப் பிறகு விருப்புமுள்ள வீரர்கள் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ள விண்ணப்பிக்க முடியும். விருப்பமில்லாதவர்கள் எந்தத் தடையுமின்றி வெளியேறலாம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT