அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட மணமக்கள் எலிவேட்டரில் சிக்கிக்கொண்டு தவித்ததால் திருண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேகர்ந்தவர்கள் விக்டோரி மற்றும் பனவ் ஜா. இருவருக்கும் திருமணம் விமரிசையாக நடந்தது. மாலையில் கிராண்ட் போஹிமின் என்ற சொகுசு ஹோட்டலின் 16-வது தளத்தில் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணமான தம்பதிகள் இருவரும் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வரவேற்புக்கு தயாரானார்கள். 16-வது மாடிக்கு செல்வதற்காக இருவரும் மின்தூக்கியில் ஏறினர். ஆனால் தரைத்தளத்துக்கும் முதல் தளத்துக்கும் இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்தூக்கி செயல்படாமல் நின்றுவிட்டது.
உடனடியாக மின்தூக்கியை பழுதுபார்க்க ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனாலும், அவர்களால் அதை சரிசெய்ய முடியவில்லை. பின்னர் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அதை சீர்செய்ய பலமுறை முயற்சித்தனர். ஆனாலும், மின்தூக்கி சரியாகவில்லை. சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மின்தூக்கி நின்றுவிட்டது.
அந்த லிப்டுக்குள் புதுமணத்தம்பதிகள், விக்டோரியாவின் சகோதரி மற்றும் நான்கு பேர் இருந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் எப்படி வெளியே வருவது என்பது தெரியாமல் தவித்தனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் நான்காவது மாடிக்குச் சென்று மின்தூக்கியின் மேல்புறம் இருந்த மூடியை உடைத்து கயிறு கட்டி ஒவ்வொருவராக 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த தகவலை தீயணைப்பு படைவீர்ர்களில் ஒருவரான டேவிட் பட் தெரிவித்ததுடன். அதை முகநூலிலும் பதிவிட்டார். முதலில் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்த தீயணைப்புப் படையினர், எங்களுக்கு திருமண வரவேற்புக்கு அழைப்பு அனுப்பப்படாவிட்டாலும், அழையா விருந்தாளியாக இப்போது கலந்துகொண்டுள்ளோம். திருமணமான உங்களுக்கு இதுதான் முதல் சோதனை. நீங்கள் இதுபோல் பலசோதனைகளைக் கடந்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பதிவிட்டனர்.