செய்திகள்

புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனா!

கல்கி டெஸ்க்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் ஷிவ்தாஸ் மீனா . தற்போது தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்என்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளறியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஷிவ்தாஸ் மீனா ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஷிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர்.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவ்தாஸ் மீனா, 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றார். அதன்பின் ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சிவ்தாஸ் மீனா ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளை கற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார்.

காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பயிற்சியை தொடங்கிய ஷிவ்தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என படிப்படியாக பணி உயர்வு பெற்றார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வுபெற்றதையடுத்து, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து இருந்ததை அடுத்து, புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT