கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. குறிப்பாக பல்வேறு துறைகளில் மனிதர்களின் வேலையை ரோபோக்கள் ரீப்ளேஸ் செய்து வருகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல புதிய முயற்சிகளை டெக் நிறுவனங்கள் எடுக்கின்றன.
இதனால் மனிதர்களுடைய வேலை, எளிதாகவும் வேகமாகவும் மாறிவிட்டது. மனிதர்கள் வடிவமைக்கும் எலக்ட்ரானிக் சாதனமான இந்த ரோபோ அதற்கு ப்ரோக்ராம் செய்யப்படும் எந்த வேலையையும் செய்து முடிக்கும். அப்படிதான் ஆற்றில் உள்ள குப்பைகளை ரோபோ ஒன்று தானாக சுத்தம் செய்யும் காணொளி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் உலா வந்தது. அதைப் பார்த்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, அதை டேக் செய்து சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆகி தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார். புதுப்புது விஷயங்களை முயற்சிக்கும் மக்களுக்கு ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அப்படிதான், ஆற்றில் தானாக குப்பை அள்ளும் ரோபோ பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ஆற்றை தானாக சுத்தம் செய்யும் ரோபோ. பார்ப்பதற்கு சீனர்களின் கண்டுபிடிப்பு போல் உள்ளது. நாமும் இதே போல உருவாக்க வேண்டும். அதுவும் இப்போதே. இதை ஏதாவது ஸ்டார்ட் நிறுவனம் கையிலெடுத்து முயற்சித்தால், நான் அதில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அவரது பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அவருடைய பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் மகேந்திராவின் இந்த ஊக்கமூட்டும் பதிவு, தொழில் முனைவோர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய நல்லுள்ளம் கொண்டவர்கள் இந்தியாவில் இருப்பது நமது நாட்டிற்கே பெருமை.