நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்திற்கான பயிற்சியை அரிசோனா பாலைவனத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது நாசாவின் நிலவுக்கு பயணிக்கும் திட்டமாகும். இதுவரை இத்திட்டம் இரண்டு முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது முறை இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள நாசா, அந்த விண்வெளி பயணத்தின் சில பயிற்சிகளை பூமியிலேயே எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் Moonwalk பயிற்சி. அரிசோனா பாலைவனத்தின் அருகே உள்ள எரிமலை நிலப்பரப்பானது நிலவுடன் அப்படியே ஒத்துப்போவதால், ஒரு வார காலம் அந்த நிலப்பரப்பில் விண்வெளி வீரர்களை நடக்க வைத்து பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த பயிற்சியின்போது விண்வெளி வீரர்கள், விண்வெளி உடைகளை அணிந்து கடந்த புதன்கிழமை அவர்களது ஆய்வைத் தொடங்கினர். அந்த பாலைவனத்தில் பல்வேறு விதமான சோதனைகள் மற்றும் ஆர்டெமிஸ் திட்டத்தின் அறிவியல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பொறியாளர்கள், கள வல்லுநர்கள், விண்வெளி வீரர்கள், விமானத்தை கட்டுப்படுத்துபவர்கள் மற்றும் பல விஞ்ஞானிகள் அடங்கிய இரண்டு குழு, களத்தை முழுமையாக சோதனை செய்வார்கள். இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், ஆர்டெமிஸ் 3 திட்டம் எந்த அளவுக்கு திறம்பட இருக்கும் என்பது கணிக்கப்படும்.
அரிசோனா பாலைவனமானது, அப்போலோ மிஷன் காலத்திலிருந்தே, நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயிற்சி களமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சந்திரனில் இருக்கும் வெடிப்புகள் பள்ளங்கள் மற்றும் எரிமலைகள் போன்ற அம்சங்கள் என அனைத்துமே இந்த பாலைவனத்தில் ஒரே மாதிரி இருப்பதால், அதற்கான பயிற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
வரும் 2026ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ் 3 திட்டம் மூலமாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்புகிறது நாசா. குறிப்பாக இந்த குழு நிலவில் இதுவரை யாரும் செல்லாத கடுமையான நிலப்பரப்பைக் கொண்ட தென் துருவத்தில் மனிதர்களை இறக்கி வரலாறு படைக்கவுள்ளது. அதற்கான முன் முயற்சிகளை மும்முறமாக எடுத்து வருகிறது நாசா.