ரயில்களில் ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு மீண்டும் நேற்று முதல் கம்பளிப் போர்வைகள் மற்றும் தலையணைகள் வழங்கும் சேவைகளை ரயில்வே நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது;
இந்திய ரயில்வே நேற்று முதல் (மார்ச் 10) ஏசி ரயில் பெட்டி பயணிகளுக்கு கம்பளி விரிப்புகள் மற்றும் தலையணை, திரைச்சீலை வழங்கும் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த வசதிகள் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், ஏசி ரயில் பெட்டிகளில் கம்பளி போர்வை மற்றும் தலையணைகள் வழங்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. அதனால் கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை போல பயணிகளுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்படும். மேலும் கொரோனாவிற்கு முந்தைய முறைப்படி முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளும் இணைக்கப்படும். இதனால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் மலிவான பயணச்சீட்டில் பயணம் செய்ய முடியும்.
-இவ்வாறு இந்திய ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.